Monday 6 June 2016

தாயிப் நகரில் தாஹா நபிகள்- கவிக்கோ கவிதை.




நபிகள் பெருமான் -

இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !

[]

தட்டாமலேயே
திறந்த கதவு !

[]

தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

[]

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதை தான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம் தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன

இல்லை ..

பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

[]

கந்தல் அணிந்த – இந்தக்
கருணைநபி கையால் தான் 
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த – இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

[]

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடைக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

[]

மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !

வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !
உயர்மறை மகுடி – இவர்
ஊதியதைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !

[]

தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !

[]

பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்

[]

அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !

தாயிப் வாசிகளே !

விந்தை மனிதர் நீர்!

கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்
ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !

[]

வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !

[]

உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !

பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !

இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

[]

அதோ பாருங்கள் !

நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !

காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !

அவை கூட
மதம் மாறி விட்டன !
தாயிப் வாசிகளே !

கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?

கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !
ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?

எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது

எங்களின்
எழுதுகோல் வழியே !


[][][]

No comments:

Post a Comment