Monday, 21 March 2016

அபூபக்கர் (ரலி) வரலாறு



உண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களின் உண்மை வரலாறு

முன்னுரை

மறைந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறு மக்களைப் பண்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. செய்ய வேண்டிய காரியங்கள் செய்யக்கூடாத காரியங்கள் இவைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் மனங்களில் குறைவாகவே மாற்றங்கள் ஏற்படும். எனவே தான் உலக மக்களின் வாழ்க்கை வழிகாட்டியான திருக்குர்ஆனில் நல்லவர்களின் வரலாறு பெரும்பகுதியைப் பிடித்திருக்கிறது.

சிறந்தவனாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் நபித்தோழர்களின் வாழ்க்கையில் ஏராளமான படிப்பினைகள் நிறைந்திருக்கின்றன. நல்ல விஷயத்தில் அவர்களைப் போன்று வாழ்ந்தவர்களுக்கு மறு உலக வாழ்வில் வெற்றி இருப்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் (9 : 100)

சில நபித்தோழர்களின் வரலாறு தமிழில் எழுதப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. ஹதீஸ் கலையின் விதிகளைப் பேணாமல் தொகுத்ததின் விளைவால் அவற்றில் பல பொய்யான செய்திகளும் பலவீனமான தகவல்களும் நிறைந்து காணப்படுகின்றன. நூலைத் தொகுத்தவர்கள் எந்த நூலில் இருந்து செய்திகளை எடுத்தார்களோ அந்த நூற்களை பாகம் பக்கத்துடன் கூறவில்லை. ஹதீஸ் எண்களையும் கூறவில்லை. அரபு மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை மாத்திரம் கவனத்தில் வைத்து தொகுக்கப்பட்டதால் புகாரி முஸ்லிம் அபூதாவுத் திர்மிதி போன்ற பிரபலமான நூற்களில் நபித்தோழர்கள் தொடர்பாக வரும் படிப்பினைகளைத் தரும் எத்தனையோ செய்திகளை அவர்கள் தவற விட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து வந்த ஆட்சித் தலைவரும் இஸ்லாத்திற்காக எண்ணில் அடங்காத தியாகங்களை செய்தவருமான அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் இச்சமுதாயத்திற்கு ஏராளமான படிப்பினைகள் படர்ந்து காணப்படுகின்றன. எனவே முதலாவதாக அவர்களுடைய வாழ்க்கையை ஆதாரப்பூர்வமான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தொகுத்துத் தந்துள்ளோம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.


[][][][][][]



அறிமுகம்

ஆப்ரஹாம் என்ற மன்னன் யானைப் படைகளுடன் காஃபாவை இடிக்க வந்த போது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட சின்னஞ்சிறு பறவைகள் அவனது படையின் மீது நெருப்பு மழையைப் பொழிந்ததால் தன் படையுடன் அவன் அழிக்கப்பட்டான். இந்த சம்பவம் நிகழ்ந்த வருடம் யானை வருடம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு நடந்து இரண்டரை வருடம் கழித்து அபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபகர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அபூபக்ர் என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ்.

நூல் : அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088

நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயரும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு (இரவில்) கொண்டு சொல்லப்பட்ட போது அதிகாலையில் இதைப் பற்றி மக்கள் (ஆச்சரியமாகப்) பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நம்பி உண்மைப்படுத்திய சிலர் (கொள்கையை விட்டும்) தடம் புரண்டார்கள். சில இணைவைப்பாளர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உமது தோழர் (முஹம்மது) கூறிக் கொண்டிருக்கிறாரே அதைப் பற்றி நீர் என்ன நினைகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு அவர் (முஹம்மத்) கூறினாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்றவுடன் முஹம்மத் இதை சொல்லியிருந்தால் திட்டமாக அவர் உண்மை தான் சொன்னார் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்குச் சென்று பகல் வருவதற்கு முன்பே அவர் திரும்பினார் என்பதையா உண்மை என்று நீர் நினைக்கிறீர்? என்று இணை வைப்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இதை விட பாரதூரமான விஷயங்களில் எல்லாம் அவரை உண்மையாளர் என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். வானத்திலிருந்து காலையிலும் மாலையிலும் (இறைச்) செய்தி (வருவதாக முஹம்மத் கூறுவதையும்) உண்மை என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். எனவே தான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அஸ்ஸித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயர் இடப்பட்டது.

நூல் : ஹாகிம் பாகம் : 10 பக்கம் : 250

அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது :

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் உமர் உஸ்மான் ஆகியோரும் உஹுது மலையின் மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் உஹுதே அசையாமல் இரு. ஏனெனில் உன் மீது ஓர் இறைத் தூதரும் (நானும்) ஒரு சித்தீக்கும் இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3675)

அபூபக்ர் (ரலி) அவர்கள் வயதில் மூத்தவராகவும் பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்பவராகவும் இருந்தார்கள். எனவே மக்களுக்கு மத்தியில் அவர்கள் நன்கு அறிமுகமாகியிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் தொடர மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூத்தவராகவும், அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளையவராகவும், அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (3911)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை புரிந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மட்டுமே கருப்பு வெள்ளை முடியுடையவர்களாக இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் அதிக வயதுடையவராகவும் இருந்தார்கள்.

நூல் : புகாரி (3919) (3920)

மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் தரும் சாட்சியத்தை விட நம்பத்தகுந்த சிறந்த சாட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. அபூபக்ர் (ரலி) அவர்கள் நல்ல மனிதர் என்று நபி (ஸல்) அவர்கள் நற்சான்றளித்தார்கள்.

அபுஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அபூபக்ர் சிறந்த மனிதராவார்.

நூல் : திர்மிதி (3728)

குடும்பம்

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிமார்கள் இருந்தார்கள். அவர்கள்:

அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா

ஆமிருடைய மகள் உம்மு ரூமான்

உமைஸுடைய மகள் அஸ்மா

ஹாரிஜாவுடைய மகள் ஹபீபா

இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான், முஹம்மத், ஆயிஷா, அஸ்மா, உம்மு குல்சூம் ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

அல்காமில் ஃபித்தாரீஹ் பாகம் : 1 பக்கம் : 396

வம்சாவழித் தொடரில் சங்கிலித் தொடராக நான்கு பேர் நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக திகழும் சிறப்பு அபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்திற்குத் தவிர வேறுயாருக்கும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அபூ குஹாஃபா (ரலி) அவர்களும் அவரது மகன் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரது மகள் அஸ்மா (ரலி) அவர்களும் அவரது மகன் அப்துல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்கள்.

சமுதாய அந்தஸ்து

அபூபக்ர் (ரலி) அவர்களின் அழகிய நடத்தை, சிறந்த அனுபவம், அப்பழுக்கற்ற வாழ்க்கை ஆகிய அம்சங்கள் அன்றைய அரபுகளிடத்தில் அவர்கள் தலைசிறந்தவராகக் கருதப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இஸ்லாம் வளர்ந்த ஆரம்பக் காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்க தலைவராக இருந்ததால் அவர்களைத் தாக்குவதற்கு யாரும் துணியவில்லை.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது

முதன் முதலில் இஸ்லாத்தை ஏழு பேர் பகிரங்கப்படுத்தினார்கள். அந்த ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அம்மார் (ரலி) அவர்களும் அம்மாரின் தாயார் சுமையா (ரலி) அவர்களும் சுஹைப் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் மிக்தாத் (ரலி) அவர்களும் ஆவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபின் மூலம் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான். அபூபக்ர் (ரலி) அவர்களை அவர்களது சமூகத்தாரின் மூலம் அல்லாஹ் பாதுகாத்தான். ஆனால் மற்றவர்களை இணை வைப்பாளர்கள் பிடித்து அவர்களுக்கு இரும்புச் சட்டைகளை அணிவித்து வெயிலில் கருக்கினார்கள்.

நூல் : இப்னு மாஜா (147)

இஸ்லாத்தை ஏற்றவர்களை கொலைவெறியுடன் பார்த்த இணை வைப்பாளர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதைக் கண்டு அவர்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தைப் பகிரங்கப்படுத்தாமல் வீட்டில் கடைப்பிடிப்பதற்கு அனுமதியளித்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

முஸ்லிம்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். பர்குல் ஃகிமாத் எனும் இடத்தை அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம் எங்கே செல்கிறீர்? என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் என் சமுதாயத்தினர் என்னை வெளியேற்றி விட்டனர். எனவே பூமியில் பயணம் சென்று என் இறைவனை வவ்ங்கப் போகிறேன் என்று கூறினார்கள். அதற்கு இப்னு தகினா அவர்கள் உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர். எனவே நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே திரும்பி உமது ஊருக்குச் சென்று உமது இறைவனை வணங்குவீராக என்று கூறினார். இப்னு தகினா தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குரைஷிக் காஃபிர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம் அபூபக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏழைகளுக்காக உழைக்கின்ற உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற விருந்தினரை உபசரிக்கின்ற பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற துன்பப்படுபவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா? என்று கேட்டார். ஆகவே குரைஷியர் இப்னு தகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தகினாவிடம் தம் வீட்டில் இறைவனைத் தொழுதுவருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் தங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அதை பகிரங்கமாக செய்யாதிருக்கும் படியும் அபூக்ருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பிவிடுவார் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்றனர்.

நூல் : புகாரி (2297)

ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்

சமுதாய அந்தஸ்தும், மக்கள் செல்வாக்கும், வசதி வாய்ப்பும் பெற்றவர்கள் பெரும்பாலும் எளிதில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்காவில் இஸ்லாம் பரவிய காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானோர் சாமானியர்கள் தான். ஆனால் இதற்கு விதிவிலக்காக பேர் புகழ் செல்வம் ஆகிய அனைத்தையும் உதறிவிட்டு சத்தியத்தின் பால் ஆஜ்ம்ப காலகட்டத்தில் விரைந்து வந்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் முதன்மையானவர்கள்.

எதிர்ப்புகள் இருந்தால் ஒரு மாதிரியும் ஆதரவுகள் இருந்தால் இன்னொரு மாதிரியும் நடந்து கொள்பவர்கள் சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அவசியம் பாடம் பெற வேண்டும்.

அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறுவதாவது

நபி (ஸல்) அவர்கள் (மக்களே) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் (ரலி) அவர்களோ நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று சொன்னார். மேலும் தம்னையும் தம் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.

புகாரி (3661)

அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் கூறுவதாவது

நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த போது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது. அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லி வருவதாக கேள்விப்பட்டேன். எனவே நான் என் வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டிருந்தார்கள். எனவே நான் அரவமின்றி மெதுவாக மக்காவிற்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் நான் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் யார் உங்களுடன் இருக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு சுதந்திரவானும் ஒரு அடிமையும் உள்ளனர் என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தார்கள்.

நூல் : முஸ்லிம் (1512)

அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் கூறியதாவது

(இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும், இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்.

நூல் : புகாரி (3660)

செல்வத்தையும், சமுதாய மரியாதையையும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வாரிக்கொடுத்த இறைவன் எவரிடத்திலும் இல்லாத அளவிற்கு ஈமானிய உறுதியையும் நிறைவாகக் கொடுத்திருந்தான். எனவே தான் இக்கட்டான அந்நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றதற்காகக் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிலால் (ரலி) அவர்களை அடிமைத் தலையிலிருந்து விடுவித்து அவர்களும் இஸ்லாத்தைச் சுதந்திரமாக கடைபிடிக்கும் நிலையை அபூபக்ர் (ரலி) அவர்கள் உருவாக்கினார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது

உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் எங்கள் தலைவராவார். எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள் என்று சொல்வார்கள்.

நூல் : புகாரி (3754)

மக்களில் மிக அறிந்தவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் குரைஷி கோத்திரத்தாரின் வம்சாவழித் தொடரைப் பற்றி மக்களில் மிக அறிந்தவராக இருந்தார்கள். ஒட்டு மொத்த குரைஷிகளின் வம்சாவழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமானால் விசாலமான அறிவும் சிறந்த மனன சக்தியும் தேவைப்படும். இந்த ஆற்றலை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

(குரைஷியர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் வந்த போது தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களைக் கிழித்தெறிவேன் என்று ஹஸ்ஸான் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரப்படாதீர். அபூபக்ர் குரைஷிகளின் வமிசாவளி குறித்து நன்கறிந்தவர். குரைஷியரோடு எனது வமிசமும் இணைந்துள்ளது. அபூபக்ர் உம்மிடம் எனது வமிசாவளியைத் தனியாப் பிரித்தறிவிப்பார் என்று கூறினார்கள். ஆகவே ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றுவிட்டு திரும்பி வந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (4903)

நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டிய விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு சமயோசித அறிவை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்தெடுக்க ஒரு அடியாருக்கு அல்லாஹ் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்றார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த முதியவர் ஏன் அழுகிறார்? தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்தெடுக்க ஒரு அடியாருக்கு அல்லாஹ் சுதந்திரம் அளித்த போது அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக அழ வேண்டுமா என்ன? என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி (ஸல்) அவர்கள் தாம். (தமது மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு நான் அறிந்து கொண்டேன்). அபூபக்ர் (ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி (466)

மக்கத்து இணை வைப்பாளர்களிடமிருந்து தப்பித்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் செய்த போது தனது சீறிய அறிவைப் பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களை மிகவும் பாதுகாப்பாகக் கொண்டு சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் தொடர மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூத்தவராகவும் அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளையவராகவும் அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள். (அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற பயணத்தின் போது) அபூபக்ர் (ரலி) அவர்களை ஒரு மனிதர் சந்தித்து அபூபக்ரே உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்? என்று கேட்கிறார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர் என்று (நபி (ஸல்) அவர்களை எதிரிக்கு காட்டிக் கொடுத்து விடாமலும் அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரு பொருள் படும்படி) பதிலளித்தார்கள். இதற்கு (பயணத்தில்) பாதை (காட்டுபவர்) என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால் நன்மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்) என்ற பொருளையே அபூபக்ர் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (3911)

நிறைவான மார்க்க அறிவு

பொதுவாக வயதானவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். ஆர்வம் இருந்தாலும் வயது முதிர்வின் காரணத்தினால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடியாது. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பொது விஷயங்களை அறிந்ததுடன் மாôக்க அறிவையும் நிறையப் பெற்றிருந்தார்கள். எனவே தான் மக்கா வெற்றிக்குப் பிறகு முதன் முதலில் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட கூட்டத்திற்கு இவர்களை நபி (ஸல்) அவர்கள் தலைவராக நியமித்தார்கள்.

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த ஆண்டிற்குப் பிறகு இணை வைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் நிர்வாணமாக எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக் கூடாது என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பி வைத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (4657)

நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட தோழமையைப் அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தமையால் மற்றவர்களுக்குத் தெரியாத பல ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறுவதாவது

நபி (ஸல்) அவர்கள் இறந்த போது அவர்களின் தோழர்கள் (நபியவர்களின் மரணத்தில்) சந்தேகப்பட முனையும் அளவிற்கு கவலையுற்றார்கள். நானும் அவர்களில் ஒருவன். உயரமான ஒரு கட்டடத்தின் நிழலில் நான் அமர்ந்திருந்த போது உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் எனக்கு சலாம் கூறினார்கள். ஆனால் அவர்கள் என்னைக் கடந்து சென்றதையோ எனக்கு சலாம் கூறியதையோ நான் உணரவில்லை. உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நான் உஸ்மானைக் கடந்து சென்ற போது சலாம் கூறினேன். ஆனால் அவர் எனக்கு பதிலுறைக்கவில்லை. இது உங்களுக்கு ஆச்சரியமாய் இல்லையா? என்று கேட்டார்கள். பின்பு அவரும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னிடத்தில் வந்து சலாம் கூறிவிட்டு எனது சகோதரர் உமர் உம்மிடம் வந்து உமக்கு சலாம் கூறியதாகச் சொல்கிறார். ஆனால் நீங்கள் அவருக்கு பதிலுறைக்கவில்லையாம். ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அப்படித் தான் செய்தீர்கள், பனூ உமய்யா கோத்திரத்தாரே உங்களின் குலப் பெருமை தான் (இவ்வாறு உங்களை செய்ய வைத்தது) என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் என்னைக் கடந்து சென்றதையும் எனக்கு சலாம் கூறியதையும் நான் உணரவில்லை என்று கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் (குறிக்கிட்டு) உஸ்மான் உண்மை சொல்கிறார். ஏதோ ஒரு விஷயம் உம் கவனத்தை மாற்றி விட்டது என்று கூறினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அது வென்ன? என்று அபூபக்ர் கேட்டார். நாம் வெற்றி பெறுவதற்கான வழியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்பதற்கு முன்பே அல்லாஹ் தனது நபியை கைப்பற்றிக் கொண்டான் என்று நான் கூறினேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி நான் அவர்களிடத்தில் (முன்பே) கேட்டு விட்டேன் என்று கூறினார். எனது தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். நீங்கள் தான் அந்த வெற்றிக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்று நான் கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதரே நாம் எப்படி வெற்றி பெற முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான் எந்த வார்த்தையை எனது சிறிய தந்தையிடம் எடுத்துக் கூறி அவர் நிராகரித்தாரோ அந்த வார்த்தையை எவர் என்னிடமிருந்து ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அந்த வார்த்தை வெற்றியாக இருக்கும் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (20)

உஸ்மான் (ரலி) அவர்கள் சலாமிற்குப் பதில் கூறவில்லை என்ற குற்றச்சாட்டை உமர் (ரலி) அவர்கள் கொண்டு வந்த போது அதை உதாசீனப்படுத்தி விடாமல் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நியாயம் கேட்கிறார்கள். தவறு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் வீர உணர்வை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

குலப் பெருமையினால் தான் உஸ்மான் சலாம் கூறவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் குற்றம்சாட்டும் போது உஸ்மான் (ரலி) அவர்களின் மீது நல்லெண்ணம் வைத்து இருவருக்கும் மத்தியில் அபூபக்ர் (ரலி) அவர்கள் இணக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். சிறிய சிறிய விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி இருவருக்கிடையே சண்டையை மூட்டுபவர்கள் இந்த நிகழ்விலிருந்து பாடம்பெற கடமைப்பட்டிருக்கிறார்கள்.

குர்ஆன் வசனத்தை மக்கள் தவறான முறையில் விளங்கி விடாமல் இருப்பதற்காக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி மக்கள் செய்ய வேண்டிய கடமையை உணர்த்தும் சீறிய சிந்தனை கொண்டவராகவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

மக்களே நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள். நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (5 : 105) (இதைப் படிக்கும் போது நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது என்று நீங்கள் நினைக்கலாம்) ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். மக்கள் அநியாயக்காரனைக் காணும் போது அவனது கைகளை அவர்கள் பிடிக்கா விட்டால் (அதாவது தீமையைத் தடுக்கா விட்டால்) அவர்கள் அனைவருக்கும் தனது தண்டனையை அல்லாஹ் பொதுவாக்கி விடும் நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி (2094)

இன்றைக்கு நல்லதை மட்டும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் நிலவும் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் நழுவிச் செல்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸை ஞாபகத்தில் வைக்க வேண்டும். இவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை உண்மையில் நேசிக்கக்கூடியவராக இருந்தால் அவர்கள் கூறிய இந்த உபதேசத்தை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை

தமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் பலர் விட்டு விடுகிறார்கள். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் இந்த அல்ட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் சில சிறிய சிறிய தவறுகளை செய்யும் போது அதைக் கண்டிக்கும் அக்கரையுள்ள பொறுப்புள்ள தந்தையாக அபூபக்ர் நடந்து கொண்டார்கள். தன்னாலும் தன் பிள்ளையாலும் யாருக்கும் இடஞ்சல் வந்து விடக் கூடாது என்று கருதினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாதுல் ஜைஷ் என்னும் இடத்தை வந்தடைந்த போது எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததைப் நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்து விட்டார்கள். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று முறையிட்டனர். அபூபக்ர் (ரலி) (என்னருகே) வந்த போது நபி (ஸல்) அவர்கள் தம் தலையை என் மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்து விட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் இல்லை எனக் (கடிந்து) கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு தனது கையால் என் இடுப்பில் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் தலை என் மடி மீது இருந்த காரணத்தினால் தான் நான் அசையாது இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மமுடைய வசனத்தை இறக்கினான். எல்லோரும் தயம்மும் செய்து கொண்டனர்.

நூல் : புகாரி (334)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஆயிஷா (ரலி)யும் ஸைனப் (ரலி)யும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டும் கூட அவர்கள் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டு (கோபமுற்று நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே அவர்களின் வாயில் மண்ணைத் தூவிவிட்டு நீங்கள் தொழச் செல்லுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (தொழச்) சென்று விட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் இப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (என் தந்தை) அபூபக்ர் வருவார். என்னைக் கடுமையாகக் கண்டிப்பார்கள் என்று கூறினார்கள். (அதைப் போன்றே) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அபூபக்ர் (ரலி) ஆயிஷா (ரலி) யிடம் வந்து கடுஞ் சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும் இப்படியா நீ நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார்கள்.

நூல் : முஸ்லிம் (2898)

நண்பர்களாக நெருங்கி பழகினாலும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ளும் போது குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு நட்பில் விரிசல் ஏற்படுகிறது. தம் மகள் என்பதால் அவளுக்கு ஆதரவாகப் பேசத்தான் எல்லாப் பெற்றோர்களும் முயற்சிப்பார்கள். ஆனால் தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மருமகனார் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் ஒரு பிரச்சனை ஏற்படும் போது நபி (ஸல்) அவர்களின் உண்மை நிலையை அறிந்து தம் மகளை அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர்கள் இருக்க பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க நான் எதையேனும் சொல்லப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வின் தூதரே என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க நான் அவரை நோக்கி எழுந்து அவரின் கழுத்தில் அடித்து விட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி அவர்கள் கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா? என்று அவ்விருவருமே கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒரு போதும் நாங்கள் கேட்க மாட்டோம் என்று கூறினர்.

நூல் : முஸ்லிம் (2946)

நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறுவதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வருவதற்கு) அனுமதி வேண்டினார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் உரத்த சப்தத்தைச் செவுயுற்றார்கள். அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சப்தத்தை உயர்த்துபவளாக உன்னை நான் காண்கிறேன் என்று கூறி ஆயிஷாவை அடிப்பதற்காக அவர்களை அபூபக்ர் பிடிக்கலானார். நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். அபூபக்ர் கோபமுற்றவராக வெளியே சென்றார். அபூபக்ர் வெளியே சென்ற பிறகு நான் அந்த மனிதரிடமிருந்து எப்படி உன்னைக் காப்பாற்றினேன் என்பதை நீ கவனித்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி)யிடம்) கூறினார்கள். அபூபக்ர் பல நாட்கள் (ஆயிஷாவின் வீட்டிற்கு வராமல்) இருந்தார்கள். பின்பு (ஒரு முறை) அனுமதி கேட்டு (வீட்டிற்கு வந்த போது) நபி (ஸல்) அவர்களையும் ஆயிஷா (ரலி) அவர்களையும் இணக்கமாகிக் கொண்டவர்களாகக் காணும் போது உங்களுடைய சண்டையில் என்னைக் கலந்து கொள்ளச் செய்தது போல் உங்கள் இணக்கத்திலும் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சேர்த்துக் கொண்டோம். சேர்த்துக் கொண்டோம் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (4347)

நற்காரியங்களை அதிகமாக செய்தவர்

ஏகத்துவக் கொள்கையை ஏற்றதை மாத்திரம் தாங்கள் செய்த பெரும் நன்மையாகக் கருதிக் கொண்டு இன்ன பிற நன்மையானக் காரியங்களில் ஆர்வம் காட்டாதவர்களை அதிகமாக சமுதாயத்தில் காணுகிறோம். இஸ்லாம் கற்றுத் தந்த அனைத்து விதமான நற்காரியங்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் நிரம்பியிருந்தது.

அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது

ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளியாக இருந்தவர்கள் ரய்யான் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர் சதகா என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துன்பமும் இல்லையே எனவே அனைத்து வாசல்கள் வழியாகவும் ஒருவர் அழைக்கப்படுவாரா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம். நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள்.

புகாரி (1897)

அபூ கதாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது

நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவில் வெளியில் வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் சப்தத்தை தாழ்த்தி தொழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தம் சப்தத்தை உயர்த்தி தொழுதுகொண்டிருந்த நிலையில் அவர்களை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சேர்ந்து இருந்த போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உனது சப்தத்தை தாழ்த்தியவராக நீர் தொழுதுகொண்டிருந்த போது நான் உங்களைக் கடந்து சென்றேன் என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு அருகில் இருப்பவர்களுக்கு (என் ஓதுதலை) நான் கேட்கச் செய்து விட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடத்தில் நீர் சப்தத்தை உயர்த்திய நிலையில் தொழுது கொண்டிருக்கும் போது உங்களை நான் கடந்து சென்றேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நான் உறங்குபவர்களை விழிக்கச் செய்கிறேன். ஷைத்தான்களை விரட்டுகிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ரிடம்) அபூக்ரே உமது சப்தத்தை கொஞ்சம் உயர்த்துங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களிடம் உமரே உமது சப்தத்தை கொஞ்சம் தாழ்த்துங்கள் என்று கூறினார்கள்.

அபூதாவுத் (1133)

மார்க்கத்திற்கே முன்னுரிமை தந்தவர்

மார்க்கத்தின் அருமையைப் புரியாதவர்கள் மார்க்கத்தை விடவும் மற்றவைகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைப் பெரும் பொக்கிஷமாக எண்ணி பல தியாகங்களைச் செய்து ஏற்றுக் கொண்டதால் இதன் அருமையை உணர்ந்து மற்ற அனைத்தையும் விட மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவுடைய நாளில் நின்று (உரையாற்றிக்) கொண்டிருந்த போது ஒரு ஒட்டகக் கூட்டம் (வியாபாரப் பொருட்களுடன்) வந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் அதை நோக்கிச் சென்று விட்டார்கள். இறுதியாக அவர்களுடன் 12 நபர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. (நபி (ஸல்) அவர்களுடன் இருந்த) அவர்களில் அபூபக்ரும் உமரும் அடங்குவர். (முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும் வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன் என கூறுவீராக என்ற வசனம் (62 : 11) இறங்கியது.

நூல் : முஸ்லிம் (1568)

வணக்க வழிபாடுகளை வீட்டிற்குள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இப்னு தகினா அடைக்கலம் கொடுத்தார். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு பகிரங்கமாகச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

உடனே இப்னு தகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து எந்த அடிப்படையில் நான் உனக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர். நீ அதன்படி நடக்க வேண்டும். இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்து விட வேண்டும். இப்னு தகினா செய்த உடன்படிக்கையை அவரே மீறி விட்டார் என்று பிற்காலத்தில் அரபியர் பேசக் கூடாது என்று நான் விரும்புகிறேன் எனக் கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமது அடைக்கல ஒப்பந்தத்தை நான் உன்னிடமே திருப்பித் தந்து விடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2297)

வேறுபட்ட இரு மதங்களைத் தழுவியவர்கள் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது என்று இஸ்லாம் கூறுகிறது. தம் மகன் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்த போது இந்தச் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தம் வாரிசாக அவரை ஆக்க மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்திமிட்டுக் கூறினார்கள். மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு உறவினர்கள் அழைக்கும் போது மார்க்கத்தை உதறிவிட்டு உறவை தேர்வு செய்பவர்கள் இந்த நிகழ்விலிருந்து படிப்பினை பெறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

உம்மு சஃத் பின்த் ரபீஃ (ரலி) அவர்கள் கூறியதாவது

நீங்கள் யார் விஷயத்தில் (வாரிசாக ஆக்க மாட்டேன் என்று) சத்தியம் செய்தீர்களோ அவர்களுக்கு அவர்கள் பங்கைக் கொடுத்து விடுங்கள். (4 : 33) இந்த வசனம் அபூபக்ர் மற்றும் அவரது மகன் அப்துர் ரஹ்மான் விஷயத்தில் தான் இறங்கியது. அப்துர் ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்க மறுத்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானை தனது வாரிசாக நான் ஆக்க மாட்டேன் என்று சத்தியமிட்டுக் கூறினார்கள். பின்பு அவர் இஸ்லாத்தைத் தழுவிய போது அவருக்குரிய பங்கை அவருக்குக் கொடுக்குமாறு அல்லாஹ் தன் நபிக்குக் கட்டளையிட்டான்.

நூல் : அபூதாவுத் (2534)

நன்மையில் முந்திக்கொள்பவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக நம்பியதினால் மார்க்க விஷயங்களில் போட்டி போட்டுக்கொண்டு எல்லோரையும் விட முன்னால் நின்றார்கள்.

அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய தினம் ஜனாஸாவை (பிரேதத்தை) உங்களில் பின்தொடர்ந்தவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய தினம் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்? என்று அவர்கள் கேட்க அபூபக்ர் (ரலி) நான் என்றார்கள். இன்றைய தினம் ஒரு நோயாளியை நலம் விசாரித்தவர் உங்களில் யார்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க அதற்கும் அபூபக்ர் (ரலி) நான் என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்றார்கள்.

நூல் : முஸ்லிம் (1865)

நன்மையான காரியங்களில் முந்திக் கொள்வதில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது.

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

பள்ளியில் ஒரு மனிதர் நின்று தொழுது கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரது ஓதுதலை நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரை (யார் என்று) நாங்கள் அறிந்து கொள்வதற்கு முற்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆன் இறக்கப்பட்டவாறு இனிமையாக ஓதுவது யாருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ அவர் இப்னு உம்மி அப்து (அதாவது இப்னு மஸ்ஊத்) அவர்கள் ஓதுவது போல் ஓதட்டும் என்று கூறினார்கள். பிறகு (தொழுது கொண்டிருந்த) அந்த மனிதர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். நபி (ஸல்) அவர்கள் (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும். (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இப்னு மஸ்ஊதிடத்தில் காலையில் சென்று அவருக்கு நற்செய்தி கூறுவேன் என்று நான் கூறிக் கொண்டேன். அவருக்கு நற்செய்தி கூறுவதற்காக காலையில் அவரிடத்தில் சென்றேன். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு முன்னால் அவரிடத்தில் சென்று நற்செய்தி கூறிவிட்டதைக் கண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக நான் எந்த ஒரு நன்மையின் பால் முந்தினாலும் எனக்கு முன்னால் அபூபக்ர் அதன் பால் என்னை முந்தாமல் இருந்ததில்லை.

நூல் ; அஹ்மத் (170)

அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியம் செய்தால் அதை எளிதில் முறித்துவிட மாட்டார்கள். ஆனால் சத்தியம் செய்த விஷயத்தை விட வேறொரு நல்ல காரியத்தைக் கண்டால் தம் சத்தியத்தை முறித்துவிட்டு நல்லதின் பக்கமே விரையக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் ஒரு சத்தியத்தைச் செய்து (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (4614)

கொடைவள்ளல்

இறைவன் அளித்த செல்வத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக அள்ளிக் கொடுத்தார்கள். அவர்களின் செல்வம் தான் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதை நபி (ஸல்) அவர்கள் ஒரு நேரத்தில் சுட்டிக்காட்டி அபூபக்ர் (ரலி) அவர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ரின் செல்வம் எனக்கு பலனளித்ததைப் போல் வேறு எவருடைய செல்வமும் பலனளிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுது விட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நானும் எனது செல்வமும் உங்களுக்குத் தான் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : இப்னு மாஜா (91)

நபி (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் திர்ஹம் முழுவதையும் எடுத்துச் சென்றார்கள். தமது குடும்பத்திற்காக அவர்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் பயணம்) சென்ற போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த அனைத்துப் பொருளையும் எடுத்துக் கொண்டு நபியவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் 5 அல்லது 6 ஆயிரம் திர்ஹங்கள் இருந்தன. அப்போது எனது பாட்டனார் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா என்னிடத்தில் வந்தார். அவர் பார்க்கும் திறன் அற்றவராக இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக தம் உயிராலும் செல்வத்தாலும் (தியாகம் செய்து) அபூபக்ர் உங்களை தவிக்க விட்டு விட்டார் என்று தான் நான் கருதுகிறேன் என்று அபூகுஹாஃபா கூறினார். நான் இல்லை பாட்டனாரே அவர் நமக்கு ஏராளமான நன்மைகளை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறிவிட்டு சில கற்களை எடுத்தேன். எனது தந்தை (அபூபக்ர்) எந்த பொந்தில் தம் செல்வத்தை வைப்பார்களோ அந்த இடத்தில் அக்கற்களை வைத்துவிட்டு அதன் மேல் ஒரு துணியை போட்டு (மறைத்து) விட்டேன். பின்பு அபூகுஹாஃபாவின் கையை பிடித்து பாட்டனாரே இந்தப் பொருளில் கை வைத்துப் பாருங்கள். (என் தந்தை பொருளை விட்டுச் சென்றுள்ளார்) என்று கூறினேன். அவர் கையை அதன் மேல் வைத்து விட்டு பராவாயில்லையே. உங்களுக்கு அவர் செல்வத்தை விட்டுச் சென்றிருந்தால் நல்ல விதமாக நடந்து கொண்டார். உங்கள் தேவைகளை இதன் மூலம் நீங்கள் அடைந்து கொள்ளலாம் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக அபூபக்ர் (ரலி) அவர்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை. மாறாக இந்த வயதானவரை இவ்வாறு கூறி அமைதிப்படுத்த நான் நாடினேன்.

நூல் : அஹ்மத் (25719)

ஏழைஎளியோர், திக்கற்றவர்கள், உறவினர்கள் ஆகியோருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவி வந்தார்கள். அறியாமைக் காலத்திலேயே இத்தனை நற்காரியங்கள் செய்தார்கள் என்றால் எத்தகைய விசாலமான மனதை அவர்கள் பெற்றிருப்பார்கள். இஸ்லாத்தில் நுழைந்த பிறகும் கூட நற்பணிகளுக்கு எள்ளளவும் கொடுக்காத கஞ்சர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் சிறந்த பாடத்தைப் பெற வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

இப்னு தகினா அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர் என்று கூறினார்.

நூல் : புகாரி (2297)

திக்கற்றோருக்கு விருந்தளித்தவர்

நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அபூதர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்த போது இணைவைப்பாளர்கள் அவரைத் தாக்கிக் கொடுமைப்படுத்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுக்கு உணவளிப்பதற்காக தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சிரமப்படுவோரைத் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து விருந்தோம்பும் உயரிய பண்பும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்தது.

அபூதர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

ஓடுகள் எலும்புகள் அனைத்தையும் எடுத்து வந்து மக்கள் என்னைத் தாக்கினார்கள். நான் மயக்கமுற்று விழுந்தேன். பிறகு நானாக மயக்கம் தெளிந்து எழுந்த போது சிவப்பு நிற சிலையைப் போன்று இருந்தேன். பிறகு நான் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்து என் உடலில் படிந்திருந்த இரத்தத்தைக் கழுவினேன். ஸம்ஸம் தண்ணீரை அருந்தினேன். இவ்வாறு நான் அங்கு முப்பது நாட்கள் தங்கியிருந்தேன்…..அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இன்றிரவு இவருக்கு உணவளிக்க எனக்கு அனுமதி அளியுங்கள் என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கதவைத் திறந்து எங்களுக்காக தாயிஃப் நகர உலர்ந்த திராட்சையை அள்ளித் தரலானார்கள். அதுவே நான் மக்காவில் உண்ட முதல் உணவாகும்.

நூல் : முஸ்லிம் (4878)

வீட்டிற்கு வந்த விருந்தாளியின் மனம் வேதனைப்படுமாறு பேசி விரட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்படியே விருந்தளித்தாலும் செல்வந்தர்கள், வேண்டியவர்கள் தனக்கு உதவியவர்களுக்குத் தான் விருந்தளிக்கிறார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பட்டினியால் வாடியவர்களுக்கு மனமுவந்து விருந்தளித்தார்கள். வந்தவரை வலியுறுத்தி சாப்பிட வைக்காததால் தம் குடும்பத்தாரையும் திட்டுகிறார்கள். இதன் காரணத்தால் அல்லாஹ் அவர்களுடைய உணவில் அள்ள அள்ள குறையாமல் இருக்கும் வண்ணம் பரகத்தைக் கொடுத்தான்.

அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது

திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இருவருக்குரிய உணவு யாரிடத்தில் உள்ளதோ அவர் மூன்றாமவரை அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஜந்தாவது ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும் எனக் கூறினார்கள். அபூபக்ர் மூன்று நபர்களை அழைத்துச் சென்றார். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தார்கள். உங்கள் விருந்தினரை விட்டு விட்டு எங்கே தங்கி விட்டீர் என்று அவர்களது மனைவி கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) இன்னும் நீ அவர்களுக்கு இரவு உணவு அளிக்கவில்லையா? என்று திருப்பிக் கேட்டார்கள். உணவை வைத்த பின்பும் நீங்கள் வரும் வரை அவர்கள் உண்ண மறுத்து விட்டனர் என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்று அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

அறிவிலியே. மூக்கறுபடுவாய் என்று ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் சாப்பிடுங்கள். அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒரு போதும் நான் சாப்பிட மாட்டேன் என்று (தம் குடும்பத்தாரை நோக்கிக்) கூறினார்கள். நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும் போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விடவும் அதிகமான உணவைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பனூஃபிராஸ் சகோதரியே இது என்ன? என்று (தம் மனைவியிடம்) கேட்டார்.

அதற்கவர் என் கண்குளிர்ச்சியின் மேல் ஆணை இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூபக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது என்று கூறிவிட்டு ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.

நூல் : புகாரி (602)

இரக்க குணமுள்ளவர்

இயற்கையாகவே அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் மென்மையான போக்கும் இரக்கத்தன்மையும் ஆழப்பதிந்திருந்தது. அதனால் தான் கொடுமை செய்யப்பட்ட பிலால் (ரலி) அவர்களை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். ஏழை எளியோர்களுக்குப் பொருளுதவியும் செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் இரக்க குணத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுவதைக் கவனியுங்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தில் என் சமுதாயத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர் அபூபக்ர் ஆவார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்களில் கடுமையானவர் உமராவார்.

நூல் : திர்மிதி (3724)

தம்மை அழிக்க நினைப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் மீதும் இரக்கப்பட்டு மன்னித்து விடும் உயரிய மனப்பான்மையை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது

பத்ருப் போர் (முடிந்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அடிமைகள் விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று (மக்களிடம்) கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் தூதரே (இவர்கள்) உங்கள் கூட்டத்தினர்; மற்றும் உங்கள் குடும்பத்தினர். இவர்களை விட்டுவைத்து (திருந்துவதற்கு) அவகாசம் அளியுங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இவர்கள் உங்களை (ஊரை விட்டும்) வெளியேற்றி உங்களைப் பொய்யர் என்று கூறினார்கள். எனவே தாமதப்படுத்தாமல் அவர்கள் பிடரிகளை வெட்டி விடுங்கள் என்று கூறினார். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அதிகமான விறகுகளைக் கொண்ட பள்ளத்தாக்கைக் கவனித்து அதிலே அவர்களைச் செலுத்தி அவர்கள் மீது நெருப்பை மூட்டி விடுங்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் பின் ரவாஹாவைப் பார்த்து) உமது உறவை நீ முறித்து விட்டாய் என்று சொன்னார்கள். சிலர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் உமர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் கூற்றையும் தூக்கிப் பிடித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர்களுக்கு எந்தப் பதிலும் தராமல் மக்களிடத்தில் வந்து இந்த விஷயத்தில் சிலரது உள்ளங்களை பாலை விட அல்லாஹ் மென்மையாக்கி விடுகிறான். சிலரது உள்ளங்களை கல்லை விடவும் கடினமாக்கி விடுகிறான் என்று கூறி விட்டு (பின் வருமாறு) சொன்னார்கள். அபூபக்ரே நீர் இப்ராஹிமைப் போன்றவராவீர். யார் என்னைப் பின்பற்றினாரோ அவர் என்னைச் சார்ந்தவர். எனக்கு யாராவது மாறுசெய்தால் (இறைவா) நீயே (அவரை) மன்னிப்பவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறாய் என்று இப்ராஹிம் கூறினார். இன்னும் அபூபக்ரே நீர் ஈஸாவைப் போன்றவராவீர். ஈஸா கூறினார். (இறைவா) அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்கள். அவர்களை நீ மன்னித்தால் நீயே மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறாய்.

நூல் : அஹ்மத் (3452)

அனைத்து மக்களும் நரகத்திற்குச் சென்று விடாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் இருந்தது. என் சமுதாயத்தின் மீது அபூபக்ர் தான் அதிக இரக்கம் உள்ளவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அபூபக்ர் (ரலி) அவர்கள் நிரூபித்தும் காட்டினார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

எனது சமுதாயத்தில் 4 லட்சம் பேரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாக அல்லாஹ் எனக்கு வாக்களித்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை (இன்னும்) அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வளவு (பேரை அல்லாஹ் அதிகப்படுத்துவான்) என்று சொன்னார்கள். அப்போதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வாறு (அல்லாஹ் மக்களை சுவர்க்கத்தில் அள்ளிப் போடுவான்) என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ரே போதும் (நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரே என்னை விட்டு விடுங்கள். எங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வதினால் உமக்கு ஒன்றுமில்லை என்று கூறினார்கள். அல்லாஹ் நாடினால் தன் (அனைத்து) படைப்பினங்களையும் ஒரே கையில் (எடுத்து) சொர்க்கத்தில் நுழையச் செய்து விடுவான் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் சரியாகச் சொன்னார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (12234)

குர்ஆனைக் கேட்டு இளகிய உள்ளம்

அரபு தேசத்திற்கே தலைமை தாங்கும் அளவிற்கு திறமையும், ஆற்றலும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்த போதும் திருக்குர்ஆனிற்கு முன்னால் அவர்கள் நடுநடுங்கினார்கள். இவர்களின் அழுகை மக்கத்து காஃபிர்களின் குடும்பங்களை நிலைகுலையச் செய்தது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தோன்றிய போது தமது வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினார்கள். அதில் தொழுது கொண்டும் குர்ஆன் ஓதிக் கொண்டும் இருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும், குழந்தைகளும் அவர்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூபக்ர் மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும் போது அவரால் தமது கண்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

நூல் : புகாரி (476)

நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் இருந்த போது அபூபக்ர் (ரலி) அவர்களைத் தொழவைக்குமாறு கட்டளையிட்டார்கள். குர்ஆன் ஓதும் போது அபூபக்ர் கடுமையாக அழத் தொடங்கிவிடுவார்கள் என்பதால் ஆயிஷா (ரலி) அவர்கள் வேறு யாராவது ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அப்துல்லாஹ் (ரலி) கூறியதாவது

நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமான போது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அபூபக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் இளகிய உள்ளம் படைத்தவர். அவர் (குர்ஆனை) ஓதினால் அழுகை அவரை மிகைத்துவிடும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தமது பதிலையே திரும்பச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அபூபக்ரை தொழவைக்கச் சொல்லுங்கள். நீங்கள் யூசுப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள் என்றார்கள்.

நூல் : புகாரி (682)

வீரம்

பொதுவாக மெல்லிய உடலும் மென்மையான உள்ளமும் கொண்டவர்களிடத்தில் வீரத்தை பெருமளவு எதிர்பார்க்க இயலாது. முரட்டுத் தன்மை கொண்டவர்களிடத்தில் மாத்திரம் தான் இன்று வீரத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு மென்மையானவராகத் திகழ்ந்தார்களோ அந்த அளவுக்கு வீரமுள்ள ஆண்மகனாகவும் காட்சியளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் மக்கத்துக் காஃபிர்கள் சுற்றித் திரிந்து கொண்டும் பெருமானாரை தேடிக் கொண்டுமிருந்த நேரத்தில் எள் முனையளவு கூட அஞ்சாமல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மதீனாவிற்குச் செல்வதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்.

(மதீனாவிற்குப்) புறப்பட எனக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது உமக்குத் தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே (தாங்கள் புறப்படும் ஹிஜ்ரத்தின் போது) நானும் தங்களுடன் வர விரும்புகிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் பயணத்திற்காக தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன. அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (2138)

உஹ‚துப் போரில் கலந்து கொண்டு எதிரிகளால் காயமுற்ற அபூபக்ர் (ரலி அவர்கள் கொஞ்சம் கூட அஞ்சாமல் மீண்டும் மறுநாள் எதிரிகளிடத்தில் போர் தொடுப்பதற்குத் தயாரானார்கள்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து தீமையிலிருந்து தம்மைக் காத்துக்கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு என்னும் (3 : 172) வது வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் ஓதிவிட்டு என்னிடம் என் சகோதரி மகனே உன் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட போது இணை வைப்பவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்? என்று கேட்டார்கள். (உஹுதில் கலந்து கொண்ட) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன் வந்தனர் என்று கூறினார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களும் இருந்தனர்.

நூல் : புகாரி (4077)

அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஒரு போருக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மாவீரராகத் திகழ்ந்ததால் இப்பொறுப்பை ஏற்று அப்போரில் எதிரிகளைக் கண்டு ஓடாமல் அவர்களை வீழ்த்தினார்கள்.

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது

நாங்கள் பஸாரா குலத்தார் மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள். எங்களுக்கும் நீர்நிலைக்குமிடையே ஒரு மணி நேரப் பயணத் தொலைவு இருந்த போது இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள். பின்னர் பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள். வேறு சிலரைச் சிறைப்பிடித்தார்கள்.

நூல் : முஸ்லிம் (3609)

தீமைகளை வெறுப்பவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் முன்னால் ஒரு தீமை நடப்பதைக் காணும் போது அதை வெறுப்பவர்களாகவும், தடுத்து நிறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதைப் பின்வரும் சம்பவத்தில் தெளிவாக உணரலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

புஆஸ் (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமியர்கள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்த போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு புறமாகத்) திருப்பிக் கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று கூறி என்னைக் கடிந்து கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை நோக்கி அவ்விருவரையும் விட்டுவிடுங்கள் என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பிய போது அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறி விட்டனர்.

நூல் : புகாரி (949)

இன்ன பிற கடமைகளைப் புறந்தள்ளிவிட்டு வணக்க வழிபாடுகளில் அளவுகடந்து செல்வதை மார்க்கம் தடை செய்திருக்கிறது. எல்லை கடந்து செயல்படுவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டதைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் கடுமையாக நடந்து கொண்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது

எவனைத் தவிர வேறு எந்த வணக்கத்திற்குரியவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக மார்க்க விஷயங்களில் எல்லை கடந்து செல்பவர்களிடத்தில் கடுமையாக நடந்து கொள்பவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுபவராக அபூபக்ர் (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. இவர்கள் விஷயத்தில் அதிகம் அஞ்சுபவராக உமர் (ரலி) அவர்களை நான் பார்த்தேன்.

நூல் : தாரமீ (138)

அல்லாஹ்விற்காக சிரமங்களை பொறுத்துக் கொண்டவர்

செல்வச் சீமானாய் சொகுசாக வாழ்ந்து வந்த இறை நேசர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்ற போது மதீனாவின் தட்பவெப்பம் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் அபூபக்ர் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். துன்பமான இந்நேரத்தில் தமது கடந்த கால சொகுசு வாழ்க்கையை எண்ணிப் பார்க்காமல் மரணத்தை நினைவு கூர்ந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அபூபக்ர் (ரலி) பிலால் (ரலி) ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும் போது மரணம் தனது செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான் என்ற கவிதையைக் கூறுவார்கள்.

நூல் : புகாரி (1889)

தபூக் போர்க்களத்தின் போது உண்ணுவதற்கு உணவில்லாமலும் பருகுவதற்கு நீரில்லாமலும் நபித்தோழர்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். இந்நேரத்தை சிரமமான நேரம் (சாஅதுல் உஸ்ரா) என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்விற்காக இச்சுமையை ஏற்றுக் கொண்டு பொறுமைக் கடலாக அபூபக்ர் (ரலி) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

சிரமமான கால கட்டத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு உமர் (ரலி) அவர்கள் கடுமையான வெப்பத்தில் தபூக்கை நோக்கி நாங்கள் சென்றோம். (ஏதோ) ஒரு இடத்தை நாங்கள் அடைந்த போது எங்களுடைய வாகனங்கள் (ஒட்டகங்கள் தண்ணீரின்றி) அழிந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு எங்களுக்குத் தாகம் ஏற்பட்டது. முடிவில் ஒரு மனிதர் தன் ஒட்டகத்தை அறுத்து அதன் நீர்ப்பையைப் பிழிந்து குடிக்க ஆரம்பித்து விட்டார். மீதி நீரை அதன் வயிற்றிலேயே விட்டு விட்டார். அப்போது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) அல்லாஹ்வின் தூதரே பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனையில் அல்லாஹ் நல்லதை ஏற்படுத்துகிறான். எனவே எங்களுக்காகப் பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினார்கள். இதைத் தாங்கள் விரும்புகிறீர்களா? என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதற்கு ஆம் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பதலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இரு கைகளையும் உயர்த்தி (பிரார்த்தனை செய்தார்கள்). மேகம் திரண்டு மழையை கொட்டிய பிறகே கைகளைத் தளர்த்தினார்கள். தங்களிடமிருந்தவற்றில் மக்கள் நீரை நிரப்பிக் கொண்டார்கள். பின்பு அம்மேகத்தைக் காணுவதற்காக நாங்கள் சென்றோம். அது (எங்கள்) படையை விட்டும் கடந்து சென்று விட்டது.

நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 4 பக்கம் : 223

ஏழை எளியவர்களின் பசியைப் போக்கி வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தம் செல்வங்களையெல்லாம் இழந்து பசிக் கொடுமைக்கு ஆளானார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இரவிலோ, அல்லது பகலிலோ (வீட்டை விட்டு) வெளியே வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களையும், உமர் (ரலி) அவர்களையும் (வெளியே) கண்டார்கள். இந்நேரத்தில் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தது எது? என்று நபி (ஸல்) அவர்கள் (அவர்கள் இருவரிடத்திலும்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் பசி தான் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களை வெளியேற்றியது தான் என்னையும் வெளியேற்றியது என்று கூறினார்கள். (பிறகு மூவரும் ஒரு அன்சாரித் தோழரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினார்கள்)

நூல் : முஸ்லிம் (4143)

பணிவால் உயர்ந்தவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். என்றாலும் எந்த ஒரு நேரத்திலும் தம் புகழையும், தியாகத்தையும் தாமே வெளிப்படுத்திக் கூறும் பண்பு அவர்களிடத்தில் தோன்றியதில்லை. மாறாக பணிவையும் அடக்கத்தையும் தான் அவர்கள் வாழ்வில் காண முடிகிறது. இறைப் பணிக்காக ஏதாவது நல்லது செய்தால் அதைச் சுட்டிக்காட்டி பதவியை அடைவதற்கு முனைபவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்த இப்பண்பைக் கட்டாயம் பெற வேண்டும்.

அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ரின் பொருளைம் தவிர (வேறு எவரின்) பொருளும் எனக்குப் பயன்படவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுது கொண்டே உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான். உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான். உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (8435)

ஒருவன் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்று விட்டால் அவனுடைய நடை உடை பாவனையில் பெருமை அகம்பாவம் கலந்து விடுகிறது. தன் உயர்வுக்குக் காரணமானவர்களிடத்திலேயே ஆணவத்துடன் நடந்து கொள்வான். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மக்களுக்குத் தொழ வைக்கும் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. என்றாலும் அவர்களிடத்தில் பணிவு அதிகரித்ததே தவிர அகம்பாவம் தலை தூக்கவில்லை.

ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள் கூறியதாவது

அம்ர் பின் அவ்ப் கூட்டத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் சென்றிருந்த போது அங்கு தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்போது பாங்கு சொல்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து நான் இகாமத் சொல்லட்டுமா? நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டிய போது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி (ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள் என்று சைகை செய்தார்கள். தமக்கு நபி (ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்கள். பின்னர் அபூபக்ர் பின்வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் அபூபக்ரே நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பிறகும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின்வாங்கி விட்டீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூகுஹாபாவின் மகனான அபூபக்ர் அல்லாஹ்வின் தூதர் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (684)

பெருமையடிப்பவரில்லை என்று நபி (ஸல்) அவர்களே சான்று தரும் விதத்தில் பணிவுடன் வாழ்ந்து காட்டியவர் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறிதாவது

எவன் தன் ஆடையை தற்பெருமையின் காரணத்தினால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க் மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகின்றது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதை பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3665)

நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல் அடுத்த ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களைத் தேர்வு செய்யுமாறு அடக்கத்துடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அந்தஸ்தையும் மரியாதையையும் தேடித் திரியாமல் தானாக வரும் போது அதில் முந்திக் கொள்ளாமல் பிறரை முற்படுத்தி பணிவுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

உமர் பின் கத்தாப் அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் (அன்சாரிகளிடம்) சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இல்லை. நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர். எங்களில் சிறந்தவர். எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாய் இருந்தவர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

நூல் : புகாரி (3667) (3667)

தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கும் உயரிய பண்பாளர்

மனிதன் என்ற அடிப்படையில் அபூபக்ர் (ரலி) அவர்களும் சில சிறிய தவறுகளைச் செய்தார்கள். ஆனால் தவற்றுக்குப் பிறகு கௌரவம் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் வலியச் சென்று அவரிடத்தில் மன்னிப்புக் கோரும் உயரிய பண்பு அவர்களிடம் இருந்தது. தாழ்த்தப்பட்டவராகக் கருதப்பட்ட தன்னால் விடுதலை செய்யப்பட் பிலால் (ரலி) அவர்களிடத்திலும் மன்னிப்புக் கேட்டவர் அபூபக்ர் (ரலி) அவர்கள். இந்தக் குணம் எல்லோரிடத்திலும் வந்துவிட்டால் நமக்கு மத்தியில் சண்டை சச்ரவுகள் எல்லாம் அகன்று விடும்.

ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

சல்மான், சுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை ஏற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்த போது அக்குழுவினர் அல்லாஹ்வின் மீதாணையாக இந்த இறை விரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே என்று கூறினர். அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள் என்று (கடிந்து) கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்த போது அபூபக்ரே நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களை கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும். அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால் உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்தி விட்டீர்கள் என்று சொன்னார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என் சகோதரர்களே நான் உங்களை கோபப்படுத்தி விட்டேனா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இல்லை. எங்கள் அருமை சகோதரரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (4916)

ரபீஆ அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறுவதாவது

ஒரு பேரிச்சை மரம் விஷயத்தில் நாங்கள் (நானும் அபூபக்ரும்) கருத்து வேறுபாடு கொண்டோம். அது எனது பகுதியில் உள்ளதாகும் என்று நான் கூறினேன். அது எனது பகுதியில் உள்ளதாகும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். எனவே எனக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் (கடும்) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் நான் வெறுக்கக்கூடிய ஒரு வார்த்தையைக் கூறி விட்டார்கள். பின்பு வருந்தினார்கள். ரபீஆவே அது போன்று என்னிடத்தில் நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள். பதிலுக்கு பதிலாகி விடும் என்று கூறினார்கள். அதற்கு நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று கூறினேன். அவர்கள் நீ இவ்வாறு கூற வேண்டும் இல்லையென்றால் உன் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று முறையிடுவேன் என்று கூறினார்கள். நான் செய்ய மாட்டேன் என்று கூறி விட்டேன். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நிலத்தை விட்டுவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்றார்கள். நானும் அவர்களுக்குப் பின்னால் சென்றேன். அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த சிலர் வந்து அபூபக்ருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக. அபூபக்ர் உம்மிடத்தில் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு எந்த விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் முறையிடச் செல்கிறார் என்று கேட்டனர். அதற்கு நான் இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? இவர் தான் (குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாவதாக இருந்தவர். முஸ்லிம்களிலேயே மிகப்பெரும் அந்தஸ்தை பெற்றவர்கள். உங்களையும் கவனிக்காமல் செல்கிறார். அவர் உங்களைப் பார்த்து நீங்கள் அவருக்கெதிராக எனக்கு உதவிசெய்வதாகக் கருதி கோபமுற்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் செல்வார். அவர் கோபமுற்றதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கோபப்படுவார்கள். பின்பு அவ்விருவரும் கோபம் கொண்ட காரணத்தினால் அல்லாஹ்வும் கோபப்படுவான். எனவே ரபீஆ அழிந்து விடுவான் என்று கூறினார். அதற்கு அவர்கள் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்? என்று கேட்டார். (ஒன்றும் செய்யாமல்) திரும்பிச் சென்று விடுங்கள் என்று நான் கூறினேன். அபூபக்ர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். நான் மாத்திரம் தனியாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்தவாறு விஷயத்தைக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தலையை என் பக்கமாக உயர்த்தி ரபீஆவே உன்க்கும், சித்திக்கிற்கும் மத்தியில் என்ன நடந்தது என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே இவ்வாறு இவ்வாறு நடந்தது. அப்போது அவர் வெறுக்கக்கூடிய ஒரு வார்த்தையை என்னிடத்தில் கூறி விட்டார். அதற்குப் பகரமாக நான் கூறியவாரே நீயும் கூறு என்று கூறினார். ஆனால் நான் (கூற) மறுத்து விட்டேன் என்று (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் சொன்னேன். அதற்கு அவர்கள் ஆம். நீ அவரிடத்தில் (அவர் கூறியவாறு) திருப்பிக் கூற வேண்டாம். மாறாக அபூபக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்றே சொல் என்று கூறினார்கள். எனவே நான் அபூபக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று சொன்னேன்.

நூல் : அஹ்மத் (15982)

நிதானமுள்ளவர்

உம்ரா செய்வதற்காக இஹ்ராம் ஆடையை அணிந்து கொண்டு நபித் தோழர்கள் ஆசையுடன் ஆர்வத்துடன் இறையில்லத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் மக்கத்து இணை வைப்பாளர்கள் அவர்களை உள்ளே வரவிடாமல் அடுத்த ஆண்டு வருமாறு உடன்படிக்கை செய்து கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் இதற்கு ஒத்துக் கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் உட்பட அங்கிருந்த பெரும்பாலான நபித்தோழர்களின் உள்ளங்கள் இந்த உடன்படிக்கைக்கு அடிபணியவில்லை. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் எதைச் சொன்னார்களோ அதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் ஓரந்தள்ளி விட்டு நிதானத்தைக் கடைபிடித்து அல்லாஹ்வின் தூதருக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கட்டுப்பட்டு நடந்து கொண்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் தான் என்று பதிலளித்தார்கள். நான் நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் (நாம் சத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் தான் இருக்கிறார்கள்) என்று பதிலளித்தார்கள். அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன் என்று பதிலளித்தார்கள்…… பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அபூபக்ரே இவர் அல்லாஹ்வின் தூதரல்லவா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் தான் என்று கூறினார்கள். நான் நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ஆம் என்றார்கள். அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நண்பரே அல்லாஹ்வின் தூதர் தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களின் சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2731)

அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி தனக்குப் பிடிக்காதவர்களை தீர்த்துக் கட்டுவது இன்றைய அரசியலில் வாடிக்கையாகி விட்டது. அரபு தேசத்தின் தலைவராகவும், பொறுமைக் கடலாகவும் திகழ்ந்த அபூபக்ரை (ரலி) அவர்களை கோபப்படுத்துகின்ற அளவிற்கு ஒருவர் நடந்து கொண்ட போôதிலும் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் தண்டித்து விடவில்லை. நிதானத்தைக் கையாண்டு மன்னித்தே விட்டார்கள்.

அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை ஒரு மனிதர் கோபப்படுத்தினார். நான் அவரைக் கொன்று விடட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை அதட்டிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இப்படி செய்வது யாருக்கும் தகுதியானதல்ல என்று கூறினார்கள்.

நூல் : நஸயீ (4003)

தீமை செய்தவரை நன்மை செய்து தண்டித்தவர்

அபூபக்ர் (ரலி) அவர்களின் உறவினரான மிஸ்தஹ் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு கூறிய போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்ணீர் வடித்து கடுமையான துன்பத்திற்கு ஆளானார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

(என் விஷயத்தில் அவதூறு பரவியதை நினைத்து என் வீட்டில்) நான் அழுதேன். என் தந்தை (அபூபக்ர்) வீட்டிற்கு மேலே (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். என்னுடைய (அழும்) குரலை அவர் கேட்டு கீழே இறங்கி வந்தார். என் தாயிடத்தில் ஆயிஷாவிற்கு என்ன ஆனது? என்று கேட்டார். ஆயிஷா விஷயத்தில் சொல்லப்பட்ட (அவதூறான) விஷயம் ஆயிஷாவிற்குத் தெரிந்து விட்டது. (அதனால் அழுகிறாள்) என்று என் தாய் கூறினார். அப்போது (என் தந்தையின்) கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. என் அருமை மகளே நீ உன் வீட்டிற்கே நீ திரும்பிச் செல்ல வேண்டும் என்று சத்தியமிட்டுக் கூறினார். நான் (நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு) திரும்பி வந்து விட்டேன்.

நூல் : திர்மிதி (3104)

ஆனாலும் பின்பு அவரை மன்னித்து அவருக்குக் கொடுத்து வந்த உதவித் தொகையை அபூபக்ர் (ரலி) அவர்கள் தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். திருக்குர்ஆன் அவர்களை தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்யும் மனிதராக மாற்றியது.

உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

(என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மட்டும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம் எனும் (24 : 22 ஆவது) வசனத்தை அருளினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தான் செலவிட்டு வந்ததைத் தொடரலானார்கள். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள்.

நூல் : புகாரி (6679)

அனுபவமிக்க ஆலோசகர்

முதிர்ந்த வயதும் சிறந்த அனுபவமும் பெற்றிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குடிமக்களின் நலன் தொடர்பாக இரவில் ஆலோசனை செய்யும் அளவிற்கு பெருமானாருடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் நெருக்கத்தைப் பெற்றிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முஸ்லிம்களின் காரியம் குறித்துத் பேசுவார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருப்பேன்.

நூல் : அஹ்மத் (173)

பிரச்சனைகள் ஏற்படும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் குறிக்கிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுவார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தீர்ப்புக் கூறுவார்கள்.

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டு போரில் ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடத்தில் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று எனக்கு எவர் சாட்சி சொல்வார் என்று கேட்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் போரில் ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடத்தில் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள். உடனே நான் எழுந்தேன். உடனே நான் எழுந்து நின்று எனக்கு எவர் சாட்சி சொல்வார் என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு மூன்றாவது தடவையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூகதாதாவே உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒரு மனிதர் இவர் உண்மையே சொன்னார். அல்லாஹ்வின் தூதரே இவரால் கொல்லப்பட்டவரிடமிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. எனக்காக (அவருக்கு ஏதாவது கொடுத்து அவரை) திருப்திப்படுத்தி விடுங்கள் என்று சொன்னார், அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதரின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர்) உண்மை சொன்னார் என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்து விட்டார்கள்.

நூல் : புகாரி (3142)

உண்மையானத் தோழர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக நேசித்தார்கள். ஒரு உண்மை நண்பன் எப்படியெல்லாம் நடந்து கொள்வாரோ அத்தனை தகுதிகளையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். அபூபக்ரும் ஏனைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்ற கருத்தை ஒருவர் சொன்ன போது அதை சகித்துக் கொள்ள இயலாமல் கோபப்பட்டு கூறியவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் திட்டி விடுகிறார்கள்.

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் மீதாணையாக பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கிறேன். மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன். உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன் என்று உர்வா (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினார். (இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி (கடவுளாக வணங்கப்பட்ட லாத் என்னும் சிலையின் மறும உறுப்பை சுவைத்துப் பார் என்று) கடுமையாக ஏசிவிட்டு நாங்கள் இறைத் தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா? என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா இவர் யார்? என்று கேட்டார். மக்கள் அபூபக்ர் என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா நீங்கள் எனக்கு முன்பு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டும் இல்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன் என்று கூறினார்.

நூல் : புகாரி (2731)

நபி (ஸல்) அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களுடன் சேர்ந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் செல்லும் அளவிற்கு இருவரும் இணை பிரியாத நண்பர்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறுவதாவது

நபி (ஸல்) அவர்கள் நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம் என்றும் நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு உள்ளே) புகுந்தோம் என்றும் நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம் என்றும் சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன்.

நூல் : புகாரி (3685)

நபி (ஸல்) அவர்களின் வருகையை மற்றவர்களை விட எதிர்பார்க்கக் கூடியவராகவும் நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டால் தனது கவனத்தை அவர்களை நோக்கி ஒருமுகப்படுத்துபவராகவும் பெருமானாரைப் பார்த்தவுடன் புன்னகைப்பவராகவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். பெருமானாரின் மீது அவர்கள் வைத்திருந்த அன்பை அவர்களுடைய இச்செயல் வெளிப்படுத்துகிறது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

முஹாஜிர்களும் அன்சாரிகளும் அமர்ந்திருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தருவார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி)யும் உமர் (ரலி) யும் இருப்பார்கள். கூடியிருப்போர்களில் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு எவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் (முதலில்) தம் பார்வையை உஸ்ர்த்த மாட்டார்கள். இவ்விருவரும் தான் நபி (ஸல்) அவர்களைப் பார்ததுக் கொண்டே இருப்பார்கள். நபி (ஸல்) அவர்களும் இவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருப்பார்கள். நபி (ஸல்) அவர்களும் இவர்களை நோக்கி புன்னகைப்பார்கள்.

நூல் : திர்மிதி (3601)

நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் புரிந்த சிறந்த தோழராக அபூபக்ர் (ரலி) அவர்கள் விளங்கினார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீரைத் தேடி ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களை முந்திச் சென்று விட்டது. அக்கூட்டத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள் காலை நேரத்தை அடைந்த போது நபி (ஸல்) அவர்களைக் காணாததால் அவர்களில் சிலர் சிலரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தண்ணீரைப் பெற்று விட்டார்கள் என்று கூறலானார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் கூறிய வார்த்தை கவனிக்கத்தக்கது.

அபூகதாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது

மக்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை விட்டுவிட்டு தண்ணீரின் பால் அவர்கள் முந்திச் செல்ல மாட்டார்கள் என்று அபூபக்ரும் உமரும் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (21506)

அவ்விருவரும் கூறியபடியே நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வந்து மக்கள் அனைவருக்கும் பருகக் கொடுத்து விட்டு இறுதியாகப் பருகினார்கள்.

இக்கட்டான நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் கவலையுற்ற போது அவர்களுக்கு ஆறுதல் கூறி பக்க பலமாக அபூபக்ர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும் தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் பிராத்தித்தார்கள்.

இறைவா எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்து விட்டால் இந்தப் பூமியில் உன்னை (மட்டும்) வழிபட யாரும் இருக்க மாட்டார்கள் என்று தம் கரங்களை நீட்டி கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களுடைய தோல்களிலிருந்து மேல்துண்டு நழுவி கீழே விழுந்து விட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்மீது போட்டுவிட்டு பின்னாலிருந்து அவர்களை கட்டியணைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (3621)

தம்னைப் பற்றி பிறர் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை நபி (ஸல்) அவர்களின் இரகசியத்தை ஒரு போதும் வெளியில் சொல்ல மாட்டேன் என்று தம் தோழரின் இரகசியத்தை காக்கக் கூடியவராக அபூபக்ர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன். அபூபக்ர் அமைதியாக இருந்தார். எனக்கு அவர் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மானை விட அபூபக்ர் அவர்கள் மீதே மிகுந்த வருத்தம் கொண்டவனாக நான் இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக் குறித்துச் சொன்ன போது நான் உங்களுக்குப் பதில் ஏதும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான் ஆம் என்று கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் நீங்கள் கூறியதற்கு பதில் எதுவும் நான் கூறாததற்குக் காரணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மவ்ம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான் உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (4005)

அதிகம் உண்மைப்படுத்தியவர்

ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது எல்லோரும் நபியவர்களை உண்மையாளர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர்கள் கூறுவதையெல்லாம் உண்மை என்று நம்புவதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் மாத்திரமே இருந்தார்கள். இதை நபி (ஸல்) அவர்களே சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் சலாம் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதரே எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன் என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று அங்கே அபூபக்ர் இருக்கிறாரா? என்று கேட்க வீட்டார் இல்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்து போய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் மீதாணையாக நான் தான் (வாக்கு வாதத்தைத் தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன் என்று இரு முறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களே) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் (ரலி) அவர்களோ நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று சொன்னார். மேலும் தம்மையும் தம் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா? என்று இரு முறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

நூல் : புகாரி (3661)

அன்னையை மிஞ்சிய அரவணைப்பு

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த போது இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு ஏராளமான இடயூறுகளை ஏற்படுத்தினார்கள். அப்போது ஊúக்கும், உலகத்திற்கும் அஞ்சாமல் ஓடோடி வந்து பெருமானாரைக் காத்தவர் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களை விட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கின்றார் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3678)

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனா புறப்படத் தயாரானார்கள். அந்தப் புனிதப் பயணத்தில் தம் நலனைக் காட்டிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு ஒரு தாய் தன் பிள்ளையைக் கவனிப்பது போல் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டார்கள்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது

என் தந்தை (ஆஸிப்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அபூபக்ரே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்ற போது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள் என்று சொன்னார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்கள் ஆம். நாங்கள் (குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து சென்றோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்து விட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இது வரை சூரிய வெளிச்சம் படாத நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. ஆகவே நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்கள் உறங்குவதற்காகச் என் கையால் ஓரிடத்தை சமப்படுத்தித் தந்தேன். மேலும் அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே உங்களைச் சுற்றிலும் உள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன். நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள் என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்பெடுக்க) விரும்பியதைப் போன்று அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே இளைஞனே நீ யாருடைய பணியாள் என்று கேட்டேன். அவன் மதீனாவாசிகளில் ஒருவரின் (பணியாள்) அல்லது மக்கா வாசிகளில் ஒருவருடைய (பணியாள்) என்று பதிலளித்தான். நான் உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டேன். அவன் ஆம் என்று சொன்னான். நான் நீ (எங்களுக்காக) பால் கறப்பாயா? என்று கேட்டேன். அவன் சரி (கறக்கிறேன்) என்று சொல்லிவிட்டு ஆடு ஒன்றைப் பிடித்தான். (ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள( மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக்கொள் என்று சொன்னேன். அவன் உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப்பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி தாகம் தணித்துக் கொண்டு உளூ செய்துகொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும் (தூக்கத்திலிருந்து) அவர்கள் எழுந்த நேரமும் ஒன்றாயிருந்தது. நான் தண்ணீரை (மஜ்ப் பாத்திரத்திலிருந்து) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும் வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான் பருகுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு நாம் புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா? என்று கேட்டார்கள். நான் ஆம் (நேரம் வந்து விட்டது) என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம்.

நூல் : புகாரி (36156)

ஜ‚ன்துப் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஸவ்ர்) குகையை நோக்கிச் சென்ற போது அல்லாஹ்வின் தூதரே குகையை நான் சுத்தப்படுத்துகின்ற வரை நீங்கள் (முதலில்) நுழையாதீர்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் குகையில் நுழைந்து (சுத்தப்படுத்திய போது) ஏதோ ஒன்று அவரது கையைத் தாக்கியது. அப்போது அவர்கள் நீ இரத்தம் சொட்டுகின்ற ஒரு விரல் தானே? நீ அடைந்த(பழு)தெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் தானே என்று கூறிக் கொண்டு இரத்தத்தை தம் விரலிலிருந்து துடைத்தார்கள்.

நூல் : ஜ‚ஸ்வுல் உஸ்பஹானீ பாகம் : 1 பக்கம் : 95

இந்தப் பயணத்தின் போது எதிரிகள் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக தேடிக் கொண்டிருந்தார்கள். ஸவ்ர் என்ற குகையில் இருவரும் தஞ்சம் புகுந்திருந்த போது குகைக்கு மேல் எதிரிகள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். தமக்கும் உயிரிலும் மேலான இறைத்தூதருக்கும் ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கலக்கமுற்ற போது நபி (ஸல்) அவர்களின் ஆறுதல் அவர்களுக்கு உறுதியை ஏற்படுத்தியது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்த போது அவர்களிடம் (குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவனைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் அபூபக்ரே என்று கேட்டார்கள்.

நூல் : புகாரி (3653)

இச்சம்பவத்தை அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (9 : 40)

இந்தப் புனிதப் பயணித்திற்கு உதவி செய்வதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் மகள் அஸ்மா (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களையும் தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களையும் தம் அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா (ரலி) அவர்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

(நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவருக்காகவும் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீபக்ர் தம் இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல் பையின் வாயில் வைத்துக் கட்டினார். இதனால் தான் இரு கச்சுடையாள் என்று அவர் பெயர் சூட்டப்பட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸவ்ர் எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் தங்கியிருப்பார். அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) ஸஹர் நேரத்தில் (விடைபெற்றுப்) புறப்பட்டு விடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்தவரைப் போன்று குரைஷிகளுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவருக்கெதிரான (குரைஷியர்களின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்களிடம் அதைக் கொண்டு செல்வார். அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பளிப்பாகக் கறந்து கொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூபக்ர் (ரலி) அவர்களின் அடிமையான ஆமிர் பின் ஃபுஹைரா அவர்கள் மேய்த்து வந்தார்கள். அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்று விடுவார். இதை மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.

நூல் : புகாரி (5807)

நபிகளாரின் நேசத்திற்குரியவர்

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

நான் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) அல்லாஹ்வின் தூதரே மக்களில் உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆயிஷா என்று கூறினார்கள். ஆண்களில் (உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்?) அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆயிஷாவின் தந்தை அபூபக்ர் ஆவார் என்று கூறினார்கள். பிறகு யார்? என்று நான் கேட்டதற்கு பிறகு ஹத்தாபுடைய மகன் உமர் ஆவார் என்று கூறிவிட்டு மேலும் பலருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் (4754)

அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)அவர்கள் கூறுவதாவது

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அபூபக்ர் அவர்கள் என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி (3590)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாவது

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (வயதான) தனது தந்தை அபூகுஹாஃபாவைத் தூக்கிக் கொண்டு வந்து (அவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்லித் தருவதற்காக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சங்கை செய்யும் விதமாக இந்த முதியவரை வீட்டிலேயே தாங்கள் வைத்திருந்தால் நான் அவரிடத்தில் வந்திருப்பேனே என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். பின்பு அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை அபூகுஹாஃபா இஸ்லாத்தைத் தழுவினார்.

நூல் : அஹ்மத் (12174)

நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் இருக்கும் போது கூட அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றி புகழந்து மக்களுக்கு மத்தியில் பேசினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின் போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு தம் உயிராலும், பொருளாலும் எனக்கு அபூகுஹாஃபாவின் மகன் அபூபக்ரை விட வேறெவரும் பேருதவியாக இருந்ததில்லை. மனிதர்களில் எவரையேனும் உற்ற நண்பராக நான் ஏற்படுத்திக் கொள்வதென்றால் அபூபக்ரையே ஏற்படுத்திக் கொள்வேன். என்றாலும் இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்தது. அபூபக்ரின் வழியைத் தவிர்த்து என்னிடம் வருவதற்காகப் பள்ளிவாசலில் உள்ள எல்லா வழிகளையும் அடைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.

புகாரி (467)

இப்னு அபீ முளைக்கா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியருப்பார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்) என்று பதிலளித்தார்கள். அபூபக்ருக்குப் பிறகு யாரை? என்று கேட்கப்பட்டது. அதற்கு உமர் (ரலி) அவர்களை என்று பதிலளித்தார்கள். உமருக்குப் பிறகு யாரை? என்று கேட்கப்பட்ட போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள்.

நூல் : முஸ்லிம் (4755)

நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர்

மக்களுக்குத் தலைமை தாங்கி தொழவைப்பது ஒரு சிறந்த அந்தஸ்தாகும். இதற்கு மார்க்கத்திலே சில தகுதிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் தான் மக்களுக்கு இமாமத் செய்து வந்தார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்த போது தமக்குப் பதிலாக அபூபக்ர் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார்கள். வேறு யாரையாவது நியமிக்குமாறு மற்றவர்கள் எவ்வளவோ கூறிய போதும் அதை மறுத்து விட்டு அபூபக்ர் தான் இதை செய்ய வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த போது பாங்கும் சொல்லப்பட்டது. அப்போது மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூபக்ரிடம் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு அபூபக்ர் மென்மையான உள்ளமுடையவர். உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி (ஸல்) அவர்கள் முதலில் கூறியதையே கூறினார்கள். திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்கு தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள்.

நூல் : புகாரி (664)

தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை இமாமாகப் பின்தொடர்ந்து அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து தொழுதுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயினால் இறந்தார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து தொழுதார்கள்.

நூல் : திர்மிதி (330)

அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மரண நோய் ஏற்பட்ட போது சில முஸ்லிம்களுடன் நானும் அவர்களிடத்தில் இருந்தேன். தொழ வைப்பதற்கு வருமாறு நபி (ஸல்) அவர்களை பிலால் அழைத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழ வைப்பவர் (ஒருவரை தொழவைக்குமாறு) கட்டளையிடுங்கள் என்று கூறினார்கள். எனவே நான் வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கு) இருக்கவில்லை. நான் உமரே எழுந்து சென்று மக்களுக்குத் தொழ வையுங்கள் என்று கூறினேன். உமர் (ரலி) முன்னால் சென்று தக்பீர் சொன்னார்கள். அவர்கள் சப்தமிட்டு ஓதுபவராக இருந்தார்கள். அவர்களின் சப்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது அபூபக்ர் எங்கே? இதை அல்லாஹ்வும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதை அல்லாஹ்வும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்து வருமாறு) அவர்களிடத்தில் ஆளனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் அந்தத் தொழுகையை தொழ வைத்த பிறகு அபூபக்ர் வந்தார். பின்பு அபூபக்ர் மக்களுக்குத் தொழ வைத்தார்.

நூல் : அபூதாவுத் (4041)

அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டவர்

நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் இருக்கும் போதே அபூபக்ர் தான் அடுத்த ஆட்சித் தலைவர் என்று நபியவர்கள் தெளிவாகவும், மறைமுகமாகவும் அறிவித்துவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தனது இறுதி நாட்களில்) நோயுற்றிருந்த போது உன் தந்தை (அபூபக்ர்) அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்து வா. நான் மடல் ஒன்றை எழுதித் தருகிறேன். ஏனென்றால் (தாமே கலீஃபாவாக ஆக வேண்டுமென) எவரும் ஆசைப்படவோ நானே (அதற்குத்) தகுதியானவன் என்று யாரும் சொல்லிவிடவோ கூடும் என நான் அஞ்சுகிறேன். (ஆனாலும் அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப்பட்டாலும்) அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறை நம்பிக்கையாளரும் மறுத்து விடுவர் என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் (4757)

தாம் இல்லாத போது தமது பணியை அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்வார்கள் என்பதை ஒரு பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மனி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மனியைத் திரும்பவும் வரும்படி கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மனி நான் வந்து தங்களைக் காணமுடியவில்லையென்றால் ….? என்று நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது) என்பது போல் கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல் என்று பதில் சொன்னார்கள்.

நூல் : புகாரி (3659)

அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தமக்குப் பின் ஆட்சிக்கு வருவார். அவர்களது ஆட்சி சொற்பக் காலத்தில் முடிவடைந்து விடும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தம் கணவில் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கினார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு பொட்டல் வெளியில் ஒன்று திரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி அல்லது இரண்டு வாளிகள் இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரை மன்னிப்பானாக, பிறகு அதை உமர் எடுத்துக் கொள்ள அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரையும் நான் கண்டதில்லை.

நூல் : புகாரி (3634)

சொல்வன்மையும் நெஞ்சுறுதியும்

சமுதாயத்தைத் தடம் புரள விடாமல் கட்டுக் கோப்புடன் கொண்டு செல்லும் நெஞ்சுறுதியும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுவதற்குச் சிறந்த நாவன்மையும் பெற்றவர்களாக அபூபக்ர் (ரலி) திகழ்ந்தார்கள். நபித்தோழர்களுக்கு மத்தியில் ஆட்சித் தலைவரை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமுதாயம் பிளவுபடும் நிலை ஏற்பட்ட போது அவர்களது சொல் வன்மையின் காரணத்தினால் தான் சமுதாயத்தை அவர்கள் ஓரணியில் திரட்டினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். ( இதைப் பிற்காலத்தில் நினைவு கூறும் போது) உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நான் பேச முயன்றது எதற்காக என்றால் நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன் என்று கூறி வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உறை நயமிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள்.

நூல் : புகாரி (3667) (3667)

இது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்றக் கருத்தில் உமர் (ரலி) அவர்கள் உட்பட பலர் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் கட்டாயம் மரணம் ஏற்படும் என்று கூறும் குர்ஆன் வசனம் அப்போது எவருடைய சிந்தனைக்கும் வரவில்லை. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆதாரங்களைக் குர்ஆனில் இருந்து எடுத்துக் காட்டி நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும், கொள்கையையும் பாதுகாத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸ‚ன்ஹ் என்னும் இடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு தங்களுக்கு என் தந்தையும் தாயும் அற்பணமாகட்டும். நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவனின் மீது ஆணையாக அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களுக்குச் சுவைக்கச் செய்ய மாட்டான் என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்த பிறகு உமர் (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே நிதானமாயிருங்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிவிட்டு எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன். அவன் இறக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும் நபியே நீங்களும் இறக்கவிருப்பவர் தாம். அவர்களும் இறக்க விருப்பவர்களே என்னும் (39 : 30) என்ற இறை வசனத்தையும் முஹம்மது ஒரு இறைத் தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத் தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால்சுவடுகளின் வழியே (பழைய மார்க்கத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான் என்னும் (3 : 144) இறைவசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மி அழுதார்கள்.

நூல் : புகாரி (3667) (3667)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் மீதாணையாக அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை அங்கும் ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

நூல் : புகாரி (1242)

தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர்

நபி (ஸல்) அவர்கள் இறந்த உடன் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதில் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியது. இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அன்சாரிகள் (தமது) பனூ சாயிதா சமுதாயக் கூட்டத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) சஃத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் எங்களில் ஒரு தலைவர் உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்) என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அபூபக்ர் உமர் பின் கத்தாப் அபூ உபைதுல்லாஹ் பின் ஜர்ராஹ் (ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். ( இதைப் பிற்காலத்தில் நினைவு கூறும் போது) உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நான் பேச முயன்றது எதற்காக என்றால் நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன் என்று கூறி வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உறை நயமிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில் (குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாய் இருப்போம். (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாக இருங்கள் என்று சொன்னார்கள். உடனே (அன்சாரியான) ஹ‚பாப் பின் முன்திர் (ரலி) அவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் உங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இல்லை நாங்களே தலைவர்களாக இருப்போம். நீங்கள் அமைச்சர்களாக இருங்கள். ஏனெனில் குரைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவைச்) சேர்ந்தவர்களும் சிறந்த செயல் திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவே உமர் பின் கத்தாப் அல்லது அபூ உபைதுல்லாஹ் பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இல்லை. நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர். எங்களில் சிறந்தவர். எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாய் இருந்தவர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர் சஃத் பின் உபாதா அவர்களைப் (புறக்கணித்து அவரது கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள் என்று சொன்னார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் தான் அவரைக் கொன்று விட்டான் என்று பதில் சொன்னார்கள்.

நூல் : புகாரி (3667) (3667)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அன்சாரிகள் எங்களில் ஒரு தலைவரும் உங்களில் ஒரு தலைவரும் (நியமிக்கப்பட வேண்டும்) என்று கூறினார்கள். அவர்களிடத்தில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழவைக்குமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டது உங்களுக்குத் தெரியாதா? எனவே அபூபக்ரை முந்துவதற்கு உங்களில் எவரது உள்ளம் விரும்பும்? என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள் அபூபக்ரை முந்துவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம் என்று கூறினார்கள்.

நூல் : நஸயீ (769)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறு நாள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பனூ சாயிதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து பைஅத் செய்த பிறகு பள்ளிவாசல் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தபடி உமர் (ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியுற்றேன். உமர் (ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நமக்கெல்லாம் இறுதியாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள். அது வரை உயிர் வாழ்வார்கள் என்றே எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். ஆனாலும் மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் என்னும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நேர்வழி காண்பித்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மழைக் குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூபக்ர் (ரலி) அவர்களே உங்களின் (ஆட்சி அதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர். எனவே அன்னாரிடம் (ஆட்சிப் பொறுப்பை) ஒப்படைத்து விசுவாசப் பிரமாணம் செய்து கொடுங்கள். நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பனூ சாயிதா மண்டபத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து விட்டிருந்தார்கள். ஆனால் பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது. அன்றைய தினம் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இறுதியில் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் ஏற அவர்களுக்குப் பொதுமக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

நூல் : புகாரி (7219)

பனூ சாயிதா எனும் இடத்தில் மக்கள் அனைவரும் திரண்டிருக்கவில்லை. அலீ (ரலி) ஸ‚பைர் (ரலி) மற்றும் இன்னும் பல நபித்தோழர்கள் இல்லாத நிலையில் குறைந்த அளவு மக்கள் தான் அங்கே திரண்டிருந்தார்கள். அங்குள்ள எல்லோரும் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பிறகு மறு நாள் அங்கு வராத எல்லோரும் அபூபக்ர் (ரலி) அவர்களை ஏக மனதாக ஏற்றுக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதால் அவர்களுக்கு எதிராக யாரும் கிளம்பவில்லை. அனைவரும் கட்டுப்பட்டனர். இது போன்ற சிறப்பு எல்லோருக்கும் கிடைக்காது என்று உமர் (ரலி) அவர்கள் பிற்காலத்தில் சுட்டிக் காட்டினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

உமர் இறந்து விட்டால் நான் இன்னாரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பேன் என்று உங்களில் யரோ சொன்னது என்னை வந்தடைந்துள்ளது. அபூபக்ரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்யப்பட்டது குறைந்த மக்களைக் கொண்டு தான் (எனவே உமருக்குப் பிறகு குறைந்த மக்கள் ஒருவரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்தாலே தலைவரை தேர்வு செய்துவிடலாம்) என்று கூறி யாரும் ஏன்ôந்து விட வேண்டாம். அபூபக்ரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்யப்பட்டது அப்படித் தான் (குறைந்த மக்களைக் கொண்டு) இருந்தது. அறிந்து கொள்ளுங்கள். அபூபக்ரின் ஆட்சியில் தீங்கு (அதாவது எதிர்ப்பு) ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான். (மக்கள் எதிர்க்காமல் இருப்பதற்கு) இன்றைக்கு அபூபக்ரைப் போன்று சிறப்பில் அனைவரையும் முந்திக் கொள்பவர் உங்களில் யாரும் இல்லை… அபூபக்ர் என்னை விட அறிந்தவராகவும் பொறுமையாளராகவும் கம்பீரமானவராகவும் இருந்தார்கள்.

நூல் : அஹ்மத் (368)

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறந்த ஆட்சியை நடத்துவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தான் வாழும் காலத்திலேயே அவர்களால் அங்கீகாரம் தரப்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு வரும் ஆட்சியை விட அவர்களின் ஆட்சியில் தான் குழப்பங்கள் குறைவாக இருக்கும் என்பதை இதன் மூலம் நபியவர்கள் உணர்த்தினார்கள்.

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறுவதாவது

இன்றைக்கு உங்களில் கனவு கண்டது யார்? என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (அல்லாஹ்வின் தூதரே) ஒரு தராசு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் போல் நான் கனவு கண்டேன். அப்போது நீங்களும் அபூபக்ரும் (அதில்) நிறுக்கப்பட்டீர்கள். நீங்கள் அபூபக்ரை விட (எடையில்) மிகைத்து விட்டீர்கள். பின்பு அபூபக்ரு (ஒரு தட்டிலும்) உமர் (ஒரு தட்டிலும்) நிறுக்கப்பட்டார்கள். அப்போது அபூபக்ர் (எடையில்) மிகைத்து விட்டார்கள். உமரும் உஸ்மானும் நிறுக்கப்பட்ட போது உமர் மிகைத்து விட்டார். பிறகு அத்தராசு உஸ்ர்த்தப்பட்டு விட்டது என்று கூறினார். (தராசு உஸ்ர்த்தப்பட்டு விட்டது என்று கூறும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் நாங்கள் வெறுப்பைக் கண்டோம்.

நூல் ; திர்மிதி (2211)

பனூ சாயிதா என்ற இடத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது அலீ (ரலி) அவர்கள் அங்கு இல்லை. பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக ஒரு தலைவரைத் தேர்வு செய்ய வேண்டிய இக்கட்டான நிலை நீடித்தது. எனவே அங்கிருந்த மக்களால் அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்கள். தம்மிடத்தில் ஆலோசிக்காமல் தலைவரைத் தேர்வு செய்து விட்டதால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்த பிறகு தம் நிலையை மாற்றிக் கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்த வரையில் அலீ (ரலி) அவர்கள் மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக் கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள். எனவே அபூபக்ர் (ரலி) இடம் சமரசம் பேசவும் பைஅத் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. ஆகவே தாங்கள் (எங்களிடம்) வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வர வேண்டாம் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் ஆளனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததே இதற்குக் காரணம். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள். (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்களிடம் நான் செல்லத் தான் செய்வேன் என்று கூறிவிட்டு அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி) தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை. ஆயினும் இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என்று நாங்கள் கருதி வந்தோம் என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன… அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள் தங்களுக்கு விசவாசப் பிரமாணம் செய்து கொடுக்கும் நேரம் (இன்று) மாலையாகும் என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் மீதேறி ஏகத்துவ உறுதி மொழி கூறி இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும் அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும் அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் பாவமன்னிப்புக் கோரிவிட்டு ஏகத்துவ உறுதி மொழி கூறிய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியை கண்ணியப்படுத்திப் பேசினார்கள்.

நூல் : புகாரி (4241)

கலகக்காரர்களை ஒடுக்கியவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு கூட்டம் ஜகாத்தைத் தர மாட்டோம் என்று கூறியது. சிலர் மழ்ம் மாறி குழப்பத்தை விளைவித்தார்கள். இவர்களுக்கு எதிராக அபூபக்ர் (ரலி) அவர்கள் போர்தொடுத்து அவர்களை அடக்கினார்கள். அன்றைக்கு மாத்திரம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்காமல் ஆட்சியைத் தக்க வைப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பின்னால் இஸ்லாமிய ஆட்சி என்றே ஒன்று அந்நாட்டில் இருந்திருக்காது.

அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது

நபி (ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்ர் (ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர்தொடுக்க அபூபக்ர் தயாரானார்). லா இலாஹ இல்லல்லாஹ் கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்… தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர… அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று உமர் (ரலி) கேட்டார். அபூபக்ர் (ரலி) உமரை நோக்கி அல்லாஹ்வின் மீதாணையாக தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக இவர்களிடம் நான் போர் செய்வேன் என்றார். இது பற்றி உமர் (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமானத் தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்.

நூல் : புகாரி (1400)

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த ஸகாத் தொடர்பான வழிமுறைகளை வசூலிப்பவருக்கு எழுதிக் கொடுத்து ஸகாத்தை வசூலிக்கச் சொன்னார்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்ட போது என்னை பஹ்ரைனுக்கு (ஆளுனராக) அனுப்பி வைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி அதில் நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தால் முத்திரையிட்டார்கள். அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. முஹம்மத் (எனும் சொல்) ஒரு வரியிலும் ரசூலு (தூதர் எனும் சொல்) ஒரு வரியிலும் அல்லாஹ் (அல்லாஹ்வின் எனும் சொல்) ஒரு வரியிலும் (முஹம்மது ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று பொறிக்கப்பட்டிருந்தது.

நூல் : புகாரி (3106)

நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பு உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்கள் இறந்த பிறகு நாட்டில் மேற்குறிப்பிட்ட பெரும் பிரச்சனைகள் எழுந்ததால் அதை சமாளிக்க அப்படையை நிறுத்தி வைக்குமாறு உமர் (ரலி) போன்ற பல நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பறவைகள் என்னை இராய்ந்து சென்றாலும் பராவாயில்லை. நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய படையை திரும்பி வரச் சொல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். உஸாமா (ரலி) அவர்களின் படை வெற்றியுடனும் செல்வத்துடனும் திரும்பி வந்தது. மக்காவைச் சுற்றிலும் உள்ள கலகக்காரர்களுக்கு இவ்வெற்றி ஒரு அச்சத்தை ஏற்படுத்தி அபூபக்ர் (ரலி) அவர்கள் வ-மையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று உணர்த்தியது.

நூல் : அத்தபகாதுல் குப்ரா பாகம் : 4 பக்கம் : 67

பித்அத்தை அஞ்சியவர்

நபி (ஸல்) அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அஞ்சினார்கள். இந்தப் பயம் நம் சமுதாய மக்களிடத்தில் இருந்தால் நபிவழியில் இல்லாத புது புது வழிபாடுகள் நம்மிடத்தில் நுழைந்திருக்காது. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கமும் நமக்குத் தூய வழியில் கிடைத்திருக்கும். இனிமேலாவது அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையிலிருந்து முறையான பாடங்களைப் பெற்று பித்அத்தை அங்கீகரிக்காமல் இருப்போமாக.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியில் நியமிக்கப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செய்யாமல்) விட்டிருந்த விஷயங்கள் தொடர்பாக அப்பாஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடத்தில் விவாதித்தார். (இது பற்றி அபூபக்ர் (ரலி) யிடம் அப்பாஸ் (ரலி) கூறிய போது) அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்படுத்தாமல் விட்டுவிட்ட விஷயம். எனவே நான் அதை முடுக்கி விடமாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (73)

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுவதாவது

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். அவர்களுக்கு அருகில் உமர் பின் கத்தாப் (ரலி) இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) (என்னிடம்) கூறினார்கள்.

உமர் அவர்கள் என்னிடம் வந்து இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். பல்வேறு இடங்களில் குர்ஆனை அறிந்த அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு விட்டனர். எனவே குர்ஆனைத் தாங்கள் திரட்டினால் தவிர அதன் பெரும் பகுதி (நம்மை விட்டுப்) போய்விடுமோ என்று என நான் அஞ்சுகிறேன். ஆகவே தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென நான் கருதுகிறேன் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன் என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான காரியம்) தான் என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) உமர் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். முடிவில் உமர் கருதியதை நானும் (உசிதமானதாகக்) கண்டேன்.

நூல் : புகாரி (4679)

நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர்

நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செயல்படுத்துவதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீவிர கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு செயல்படுத்தும் போது பலருடைய கோபத்திற்குத் தான் ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை. அல்லாஹ்வின் தூதரே தனக்கு முக்கியம் என்பதை அவர்கள் கடைப்பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்ட பிறகு நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூபக்ர் (ரலி) யிடம் கேட்டார்கள். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

நூல் : புகாரி (3092)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்கள் சொத்துக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று ஃபாத்திமாவுக்குப் பதிலளித்தார்கள். இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர் ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விடமாட்டேன். ஏனெனில் அவர்களது செயல்களில் எதனையாவது நான் விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3091)

நபிகளாரின் உறவினர்களை நேசித்தவர்

ஃபாத்திமா (ரலி) அவர்களின் கோரிக்கையை அபூபக்ர் (ரலி) ஏற்றுக் கொள்ளாததால் நபிகளாரின் குடும்பத்தாருக்கு அபூபக்ர் (ரலி) அநியாயம் செய்து விட்டார் என்றும் பெருமானாரின் உறவினர்களை அபூபக்ர் மதித்து நடக்கவில்லை என்றும் ஷியாக்களில் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஃபாத்திமா (ரலி) அவர்களின் கோரிக்கை நபிகளாரின் கூற்றுக்கு எதிராக இருந்த ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அபூபக்ர் அதை ஏற்க மறுத்தார்கள். தம் குடும்பத்தார்களை நேசிப்பதை விட நபி (ஸல்) அவர்களின் உறவினர்களைக் கடுமையாக நேசித்து வந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஃபதக்கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் பங்கைத் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார்கள். நாங்கள் விட்டுச் செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தார்கள் இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தான் உண்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு உவப்பானவர்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (4036)

நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்தைப் பங்கிடத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். ஆனால் நபிகளாரின் குடும்பத்தாருக்குரிய தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை தம் மீது சுமத்திக் கொண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டால் தாம் செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நீங்கள் இறந்து விட்டால் உங்களுக்கு யார் வாரிசாகுவார்கள் என்று கேட்க அதற்கு அபூபக்ர் (ரலி) என் குழந்தையும் குடும்பத்தார்களும் ஆவார்கள் என்று கூறினார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் நாங்கள் மட்டும் ஏன் நபி (ஸல்) அவர்களுக்கு வாரிசாகக் கூடாது என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) நபிக்கு யாரும் வாரிசாக முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். என்றாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாருடைய தேவைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு நானும் பொறுப்பேற்றுக் கொள்வேன். அவர்கள் யாருக்குச் செலவு செய்து வந்தார்களோ அவர்களுக்கு நானும் செலவு செய்வேன் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (57)

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களே கட்டளையிட்டுள்ளார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களின் பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்துள்ளார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்

முஹம்மத் (ஸல்) அவர்கள் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)

நூல் : புகாரி (3713)

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்களைத் தம் தோளி ன் மீது ஏற்றிக்கொண்டு என் தந்தை உனக்கு அற்பணமாகட்டும். நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கின்றாய். (உன் தந்தை) அலீ அவர்களை ஒத்தில்லை என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (இதைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

நூல் : புகாரி (3542)

மக்களுக்குச் செய்த உபதேசங்கள்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக மட்டும் இருக்கவில்லை. அதிகமான மார்க்க ஞானத்தை அவர்கள் பெற்றிருந்தமையால் மக்களுக்கு நல்லது குறித்து உபதேசம் செய்பவராகவும் மக்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக செல்வதைக் கண்டால் சரியான வழியைக் காண்பித்து நேர்வழியில் செலுத்தக் கூடியவராகவும் இருந்தார்கள்.

கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் (தம் உரையில்) உங்கள் விஷயத்தில் நான் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டுள்ளேன். உங்களில் நான் சிறந்தவன் இல்லை. நான் நல்ல விதமாக நடந்து கொண்டால் எனக்கு உதவியாக இருங்கள். நான் தவறாக நடந்தால் என்னை சீர்செய்யுங்கள். ஏனென்றால் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஷைத்தான் என்னிடத்தில் உள்ளான். நான் கோபமாக இருக்கும் போது என்னை விட்டும் விலகி விடுங்கள். உங்கள் உடம்புகளிலும் தோல்களிலும் (காய) வடுவை நான் ஏற்படுத்த மாட்டேன் என்று கூறினார்கள்.

நூல் : அஸ்ஸ‚ஹ்த் லிஅபீ தாவுத் பாகம் : 1 பக்கம் : 34

இப்ராஹிம் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் தம் உரையில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இரவிலோ பகலிலோ ஆட்சி அதிகாரத்தின் மீது பேராசைப்பட்டதில்லை. அதில் ஆசை கொண்டு இரகசியமாகவோ பகிரங்கமாகவோ அல்லாஹ்விடத்தில் நான் அதை வேண்டியதுமில்லை. என்றாலும் (ஒரு தலைவர் நியமிக்கப்படா விட்டால்) குழப்பம் ஏற்படுவதைப் பயந்தேன். ஆட்சி செலுத்துவதில் எனக்கு நிம்மதியில்லை. மிகப் பெரிய காரியம் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் (என்னை) உறுதிப்படுத்தினாலே தவிர அதை (கையாளுவதற்கு) எனக்கு எந்தச் சக்தியும் வலிமையும் இல்லை என்று கூறினார்கள்.

நூல் : அல்முஸ்தத்ரக் லில்ஹாகிம் பாகம் : 3 பக்கம் : 70

அவ்ஸத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களுக்கு உறையாற்றினார்கள். அப்போது அவர்கள் நான் (நிற்கும்) இந்த இடத்தில் சென்ற வருடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அழுது விட்டார்கள். அல்லாஹ்விடத்தில் ஆரோக்கியத்தை வேண்டுங்கள். ஏனென்றால் உறுதிக்குப் பிறகு ஆரோக்கியத்தை விட (வேறு பெரிய பாக்கியத்தை) எவரும் கொடுக்கப்பட மாட்டார். உண்மை பேசுவதைக் கடைப் பிடியுங்கள். ஏனென்றால் உண்மையாகிறது நல்ல கரியங்களைக் கொண்டு வரக்கூடியது. அவ்விரண்டும் (பெற்றவர்கள்) சொர்க்கத்தில் இருப்பார்கள். பொய் சொல்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் பொய்யாகிறது தீமைகளைக் கொண்டு வரக்கூடியது. அவ்விரண்டும் (பெற்றவர்கள்) நரகத்தில் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். கோபித்துக் கொள்ளாதீர்கள். (நட்பை) முறித்துக் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு சகோதரர்களாய் இருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் (தனது உரையில்) கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (5)

கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸைனப் என்றழைக்கப்படும் அஹ்மஸ் குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மௌன விரதம் பூண்டு) பேசாமல் இருப்பவளாகக் கண்டார்கள். இவளுக்கென்ன ஆயிற்று? இவள் ஏன் பேசாமல் இருக்கிறாள்? என்று கேட்டார்கள். மக்கள் (இவர் ஹஜ் செய்யும் வரை) எவருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளிடம் நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மௌன விரதம் பூணுவ)து அனுமதிக்கப்பட்டக் காரியமல்ல. இது அறியாமைக் காலச் செயலாகும் என்று சொன்னார்கள். ஆகவே அவள் (மௌன விரதத்தைக் கலைத்துப்) பேசினாள்.

நூல் : புகாரி (3834)

மக்களிடம் நடந்து கொண்ட முறைகள்

ஒரு சிறந்த ஆட்சியாளன் மக்களிடத்தில் எப்படியெல்லாம் நடந்து கொள்வானோ அம்முறையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களிடத்தில் நடந்து கொண்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் ஆட்சி செய்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்திக் காட்டிய உன்னதமான தலைவராகத் திகழ்ந்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது

பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உனக்கு இன்ன இன்னப் பொருட்களைத் தருவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும் வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்ன இன்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள் என்று சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்த போது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இது போல் இன்னும் இரண்டு மடங்குகள் எடுத்துக் கொள்வீராக என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (2296)

அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பிரச்சனைகள் கொண்டு வரப்படும் போது தமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் நியாயமான அடிப்படையில் மார்க்கம் சொல்கின்ற அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மிக நெருங்கிய தோழராக இருந்த போதிலும் உமர் (ரலி) அவர்களிடத்தில் நியாயம் இல்லாத போது அவர்களுக்கு எதிராகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். இதைப் பின்வரும் சம்பவம் உணர்த்துகிறது.

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

அன்சாரிகளைச் சார்ந்த ஒரு பெண்மனி உமர் (ரலி) அவர்களிடத்தில் (மனைவியாக) இருந்த போது ஆஸிம் பின் உமர் என்பவரை (உமர் (ரலி) அவர்களின் மூலம்) பெற்றெடுத்தார். பிறகு அப்பெண்னை விட்டும் உமர் (ரலி) அவர்கள் பிரிந்து விட்டார்கள். (ஒரு நாள்) உமர் (ரலி) அவர்கள் குபா என்ற இடத்திற்கு வந்தார்கள். அப்போது பள்ளிவாசலின் முற்றத்தில் தம் மகன் ஆஸிம் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரது கொடுங்கையை பிடித்து தம் வாகனத்தில் தனக்கு முன்னால் வைத்தார்கள். அப்போது அச்சிறுவனின் பாட்டியார் வந்து உமர் (ரலி) அவர்களிடத்தில் சர்ச்சையில் ஈடுபட்டார்கள். இறுதியில் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) வந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் இவன் என்னுடைய மகன். (என்னிடத்தில் தான் இருப்பான்.) என்று கூறினார்கள். இவன் எனது மகன் (என்னிடத்தில் தான் இருப்பான்) என்று அப்பெண் கூறினார். அப்போது அபூபக்ர் (ரலி) அப்பெண்ணுடன் அச்சிறுவனை விட்டுவிடு என்று (உமர் (ரலி) அவர்களிடத்தில்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் பதிலுக்கு ஒரு வார்த்தையும் அபூபக்ரிடம் பேசவில்லை.

நூல் : முஅத்தா (1260)

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்ததோடு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்புகளைத் தரக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். சட்டம் தனக்குத் தெரியாத போது மனம் போன போக்கில் கூறி விடாமல் தெரிந்தவர்களிடம் கேட்டு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார்கள்.

கபீஸா பின் துஐப் (ரலி) அவர்கள் கூறுவதாவது

(ஒரு வயதான) பாட்டி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து தனக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அப்பாட்டியிடத்தில் அல்லாஹ்வின் வேதத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வேதத்திலும் உமக்கு ஒன்றுமில்லை (என்று நான் நினைக்கிறேன்). (இது தொடர்பாக) நான் மக்களிடத்தில் கேட்கிறேன். தாங்கள் செல்லுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடத்தில் (பாட்டிக்கு சொத்தில் பங்கு உண்டா என்று) கேட்ட போது முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது பாட்டிக்கு ஆறில் ஒரு பங்கை அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (இதற்கு ஆதரவாக) உம்முடன் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் எழுந்து முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) கூறியதைப் போன்றே கூறினார்கள். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் பாட்டிக்கு ஆறில் ஒன்று என்றப் பங்கைச் செயல்படுத்தினார்கள்.

நூல் : திர்மிதி (2027)

நாணமிக்க தலைவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்னால் தொழில் செய்து தமது குடும்பத்தைக் கவனித்து வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலில் அவர்களால் ஈடுபடமுடியவில்லை. எனவே பொது நிதியைப் பெருக்குவதையே தம் வேலையாக ஆக்கிக் கொண்டு தமக்குரிய சம்பளமாக பொதுநிதியிலிருந்து தம் குடும்பத்தாருக்கு செலவு செய்யப்படும் என்று ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆன போது எனது தொழில் என் குடும்பத்தாருக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாயத்தினர் அறிவர். இப்போது நான் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன். இனி அபூபக்ரின் குடும்பத்தினர் இந்தப் பொதுநிதியிலிருந்து உண்பார்கள். இதில் முஸ்லிம்களுக்காக உழைப்பேன் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2070)

ஆடம்பரம் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து உலக வரலாற்றில மின்னிக் கொண்டிருக்கிறார்கள். தான் இறந்தால் ஏற்கனவே தான் அணிந்திருக்கும் பழைய ஆடையே தனக்குப் போதும் இறந்தவனுக்குப் புதிய ஆடைத் தேவையில்லை என்று அவர்கள் கூறிய வார்த்தை நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது. இந்த உண்மையை உணர்ந்தால் கல் நெஞ்சம் கூட கரைந்து போய்விடும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்தீர்கள் என்று கேட்டார்கள். வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன். அபூபக்ர் (ரலி) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள் என்று கேட்டார்கள். நான் திங்கட்கிழமை என்றேன். இன்று என்ன கிழமை என்று கேட்டதும் நான் திங்கட்கிழமை என்றேன். அதற்கவர் இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன் என்று கூறிவிட்டுத் தான் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார். அதில் குங்குமப் பூவின் கறை படிந்திருந்தது. இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார். நான் இது பழையதாயிற்றே என்றேன். அதற்கு அவர் மய்யித்தை விட உயிருடன் இருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார். (அன்று) காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்.

நூல் : புகாரி (1387)

இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் போது தம் குடும்பத்திற்னெ எந்தச் சொத்தையும் விட்டுச் செல்லவில்லை. எல்லாவற்றையும் இழந்து நன்மைகளை அதிகம் சம்பாரித்துக் கொண்டு அல்லாஹ்விடத்தில் சென்றடைந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அபூபக்ர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அவர்கள் எந்த ஒரு தீனாரையும் திர்ஹத்தையும் விட்டுச் செல்லவில்லை. அல்லாஹ் (அவர்களுக்கு நல்ல) இருப்பிடத்தை அமைத்துத் தருவானாக

நூல் : அபூதாவுத் இமாம் எழுதிய அஸ்ஸ‚ஹ்த் என்ற நூல் (35)

சொர்க்கவாசி என்று நற்செய்திக் கூறப்பட்டவர்

நபி (ஸல்) அவர்களுடன் வாழந்த காலத்திலேயே சொர்க்கவாசி என்ற நற்செய்தியை அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) வாயால் சொல்லக் கேட்டார்கள்.

அபூ மூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் அரீஸ் கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவற்றுக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். இன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாயில் காவலனாக இருப்பேன் என்று நான் சொல்லிக் கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான் யார் அது? என்றுக் கேட்டேன். அவர்கள் (நான் தான்) அபூபக்ர் என்று பதிலளித்தார்கள். உடனே நான் சற்றுப் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று அல்லாஹ்வின் தூதரே இதோ அபூபக்ர் அவர்கள் உள்ளே வர தங்களிடம் அனுமதி கேட்கிறார்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும் அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள் என்று சொன்னேன்.

நூல் : புகாரி (3674)

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூபக்ர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஸ‚பைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். சஃத் சொர்க்கத்தில் இருப்பார். சயீத் சொர்க்கத்தில் இருப்பார். அபூ உபைதா பின் ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்.

நூல் : திர்மிதி (3680)

மரணம்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 13 ம் வருடம் அறுபத்து மூன்றாவது வயதில் மரணமடைந்தார்கள். இவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் போல் 63 ஆண்டு காலம் இந்த உலகத்தில் நல்லவராக வாழ்ந்து சரித்திரம் படைத்து விட்டு இறைவனிடம் சென்றார்கள்.

நூல் : அல்பிதாயதுவன் நிஹாயா

அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.

நூல் : முஸ்லிம் (4686)

அபூபக்ர் (ரலி) அவர்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்தார்கள். இந்தக் குறுகிய காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் சாதித்துக் காட்டிய விஷயங்களைப் பார்க்கும் போது மிகவும் திறமையாக ஆட்சிபுரிந்துள்ளார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம்

அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் எவரும் அவர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டதே இல்லை. மாறாக அவர்கள் மக்களில் எல்லாம் சிறந்தவர் என்று தான் மக்கள் அவர்களுக்கு பட்டம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நிகராக யாரும் அக்காலத்தில் இல்லை என்று அவர்கள் காலத்தவர்களால் சான்றைப் பெறுகின்ற அளவிற்கு அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்துச் சென்றார்கள்.

முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

நான் என் தந்தை (அலீ (ரலி) அவர்கள்) இடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அபூபக்ர் அவர்கள் என்று பதிலளித்தார்கள். நான் பிறகு யார்? என்று கேட்டேன். பிறகு உமர் அவர்கள் (மக்களில் சிறந்தவர்) என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி (3671)

அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக வந்த உமர் (ரலி) அவர்கள் தம்மை விட அபூபக்ர் தாம் உயர்ந்தவர் என்று கூறியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக நியமிக்கக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது) ஏனென்றால் (எனக்கு முன்பு) என்னை விடச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டு விட்டாலும் (அதுவும் தவறாகாகது.) ஏனென்றால் என்னை விடச் சிறந்தவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விதம் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (7218)

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தான் சிறப்பில் முதலிடத்தை கொடுத்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நாங்கள் (சிறப்பில் முதவாவது) அபூபக்ர். அடுத்து உமர் அடுத்து உஸ்மான் என்று கூறிக் கொண்டிருந்தோம்.

நூல் : திர்மிதி (3640)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் (சிறந்தவர்களாகக் கருதி வந்தோம்.) பிறகு (மீதமுள்ள) நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் விட்டு விட்டோம்.

நூல் : புகாரி (3698)

அபூபக்ர் (ரலி) அவர்களும் மனிதரே

அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையை தமிழில் தொகுத்த சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் கனவிற்கு விளக்கம் கொடுத்தால் அவ்விளக்கம் அணு அளவு கூட பிசகாது என்று எழுதுகிறார்கள். நபித்தோழர்களின் விளக்கத்தை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்விரு சாராரின் கருத்தும் தவறானதாகும். ஏனென்றால் அபூபக்ர் (ரலி) அவர்களும் மனிதர் தான். அவர்களின் விளக்கத்திலும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும் என்பதே உண்மை. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு. குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்று விடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (மூன்றாவதாக) மற்றொரு மனிதரும் அதைப் பற்றிக் கொண்டு அதனுடன் மேலே சென்று விட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது என்று சொன்னார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மேகம் தான் இஸ்லாமாகும். சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர். குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது நீங்கள் இருந்து வருகின்ற சத்திய (மாôக்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்தி விடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உஸ்ர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அதன் மூலம் உஸ்ர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்து விடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உஸ்ர்ந்து விடுகிறார் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதரே என் தந்தை தங்களுக்கு அற்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? தவறா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சிலவற்றைச் சரியாக சொல்லி விட்டீர்கள். சிலவற்றைத் தவறாகச் சொல்லி விட்டீர்கள் என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் (இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப் போவதில்லை) என்றார்கள்.

நூல் : புகாரி (7046)

அபூபக்ர் (ரலி) அவர்கள் நம்மையெல்லாம் விட சிறந்தவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒருவரை மதிப்பது என்பது வேறு. மார்க்க விஷயத்தில் பின்பற்றுவது என்பது வேறு. நபித்தோழர்களில் யாருக்கும் வஹீ வரவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் இம்மார்க்கம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. எனவே இதிலே யாரும் எதுவும் சேர்க்க முடியாது. நபித்தோழர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால் நாம் மார்க்க சட்டதிட்டங்களில் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது. அதே நேரத்தில் அவர்களை நேசிப்பதிலும் மதிப்பதிலும் குறைவு வைத்துவிடக் கூடாது.

பலவீனமான செய்திகள்

அபூபக்ர் (ரலி) அவர்களைச் சிறப்பித்துக் கூறும் விதத்தில் பலவீனமான செய்திகள் ஏராளமாக உள்ளது. பின்வரும் பலவீனமான செய்திகள் மக்களுக்கு மத்தியில் பிரபலியமாக இருப்பதால் இவற்றை பற்றிய விபரத்தை மட்டும் பார்ப்போம்.

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் என்னிடத்தில் இதற்குத் தோதுவாக செல்வம் இருந்தது. ஒரு நாளும் அபூபக்ரை (நன்மையில்) நான் முந்தியதில்லை. எனவே நான் இன்று அபூபக்ரை (தர்மம் செய்வதில்) முந்தி விடுவேன் என்று (மனதில்) கூறிக் கொண்டேன். எனது செல்வத்தில் பாதியை (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் கொண்டு வந்தேன். உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது போன்று (பாதியை வைத்துவிட்டு வந்துள்ளேன்) என்று கூறினேன். அபூபக்ர் தம்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்துவிட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வைத்துவிட்டு வந்தேன் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு போதும் அபூபக்ரை எந்த (நன்மையான) விஷயத்திலும் என்னால் முந்தவே முடியாது என்று நான் கூறிக் கொண்டேன்.

நூல் : திர்மிதி (3608)

இந்த செய்தியில் ஹிஷாம் பின் சஃத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் முயீன் அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகிய இமாம்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி முஸ்னத் பஸ்ஸாரில் இஸ்ஹாக் பின் முஹம்மத் என்பவரின் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ மற்றும் இமாம் நஸயீ ஆகியோர் கூறியுள்ளார்கள்.

இந்தச் சமுதாய மக்களின் ஈமானுடன் அபூபக்ரின் ஈமான் (தராசில்) வைக்கப்பட்டால் அபூபக்ரின் ஈமானே மிகைத்து நிற்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியை ரவ்வாத் பின் ஜர்ராஹ் என்பவர் அறிவிக்கிறார். இவர் மூளை குழம்பியவர் என்று இமாம் புகாரி அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விடப்பட வேண்டியவர் என்று இமாம் தாரக்குத்னீ கூறியுள்ளார். எனவே இச்செய்தி பலவீனமானது.

நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸவ்ர் குகைக்குள் நுழைந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் குகைக்குள் இருந்த எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிட்டு மீதமிருந்த ஒரு ஓட்டையை தம் காலால் அடைத்துக் கொண்டார்கள். அப்போது ஒரு பாம்பு அவர்களைக் கொட்டியது. தம் மடியில் உறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை எழுப்ப மனமில்லாமல் அபூபக்ர் (ரலி) அவர்கள் வேதனையைத் தாங்கிக் கொண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்கள் தம் எச்சிலை பாம்பு கடித்த இடத்தில் தடவி விஷத்தை எடுத்தார்கள் என்று ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இந்நிகழ்விற்குரிய எந்த அறிவிப்பாளர் தொடரையும் நாம் காணவில்லை. இச்செய்தியில் தவறுகள் இருப்பதாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது பிதாயதுன் நிஹாயா எனும் வரலாற்று நூலில் கூறியுள்ளார். எனவே இது சரியான தகவல் அல்ல.

இருவரும் குகைக்குள் நுழைந்த பிறகு குகைக்கு வெளியே சிலந்தி ஒன்று வலை பின்னியதால் குகைக்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றிருக்க முடியாது என்று கருதி எதிரிகள் குகைக்குள் நுழையாமல் சென்று விட்டார்கள் என்ற தகவலும் பரவலாக மக்களுக்கு மத்தியில் பேசப்படுகிறது. இச்செய்தி முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் பின் ஸஃபர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என்று அறியப்படவில்லை என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.


அபூபக்ர் (ரலி) வரலாறு


ஆசிரியர் : அப்பாஸ் அலி
பக்கங்கள் : 112.



[][][]

Sunday, 13 March 2016

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்





1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.


2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.


3.அமானிதத்தை (அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.


4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.


5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.


6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.


7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.


8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.


9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.


10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.


11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.


12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.


13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.


14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு 
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.


15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.


16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.


17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.


18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.


19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.


20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.


21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.


22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.


24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.


25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.


26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.


27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.


28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.


29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.


31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.


32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.


33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.


34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.


35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.


36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.


37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

. 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.


39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.


40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.


41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.


42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.


43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.


44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.


45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.


46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.


47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.


48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.


49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.


50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.


51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.


52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.


53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.


54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்


55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.


56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.


57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.


58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.


59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.




60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்


[][][]

Saturday, 20 February 2016

முஹம்மது நபியும், இயேசு கிறிஸ்துவும்



நன்மை எது..தீமை எது என்று பார்த்து நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்வை அமைத்துக் கொள்ளத் தான் மனிதனுக்கு பகுத்தறிவு வழங்கப்பட்டிருக்கிறது..
நன்மை எது..தீமை எது என்று சொல்லித் தரவேண்டியது யார்.? படைத்த இறைவன் தான் சொல்லித் தர முடியும்..

அந்த வகையில் மனிதனை படைத்த நாள் முதல் மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், வழிகாட்டிகள், காலங்கள் தோறும் இறைவன் புறத்திலிருந்து வந்த வண்ணமிருந்தன..

எப்பொழுதெல்லாம் தீமைகள் பெருகினவோ, எப்பொழுதெல்லாம் நன்மையையும் தீமையும் பிரித்தறிய முடியாத சூழல்கள் உருவாகி அக்கிரமங்கள் தாண்டவமாடினவோ, அப்பொழுதெல்லாம் இறைவன் இறைத் தூதர்களை அனுப்பி வைத்தான். அந்த வரிசையில் இறுதித் தூதர் முகம்மது நபியவர்கள்.

முகம்மது நபியவர்கள் இறைவனல்ல, இறைவனது மகனோ, இறைத்தன்மை கொண்டவரோ, இறைவனது புனிதத்தன்மையில் பங்காளியோ அல்ல.. பிறப்பையும் இறப்பையும் கொண்ட எளிய, இனிய மனிதர்.. மனித விழுமியங்களை முழுமையாக வகுத்தளித்து, அதன் படி வாழ்ந்தும் காட்டிய சிறப்பான மனிதர்.

நபிகளாருக்கு முன்பு பல ஆயிரம் இறைத்தூதர்கள் தோன்றி இறை கட்டளைகளின் படி மக்கள் மத்தியில் சீர்திருத்தம் செய்தனர். நபிகளாருக்கு முந்தைய சீர்திருத்தவாதி, இறைத்தூதர் இயேசு கிறிஸ்து அவர்கள்.

இயேசு கிறிஸ்து ஒருபோதும் தன்னை இறைவனாகவோ, இறைவனது மகனாகவோ, இறைத்தன்மை கொண்டவராகவோ, இறைவனது புனிதத்தன்மையில் பங்கிருப்பதாகவோ சொன்னதில்லை. இறை ஆணையின் படியே தான் தான் செயல்படுவதாக அவர் சொன்னார்.

இயேசு கிறிஸ்துவும் பிறப்பையும் இறப்பையும் கொண்ட எளிய, இனிய மனிதர்.. மனித விழுமியங்களை முழுமையாக வகுத்தளித்து, அதன் படி வாழ்ந்தும் காட்டிய சிறப்பான மனிதர்.

அவரது போதனைகள் சுயநலமிக்க அக்கிரமக்கார மனிதக் கரங்களால் மாசடைந்து போனது. எந்த இறைவனை மண்டியிட்டு பிரார்த்தனை செய்தாரோ, அதே இறைவனுக்கு இணையாக கயவர்களால் இயேசு கிறிஸ்துவும் இறைவனாக ஆக்கப்பட்டார். இது தான் உண்மை சம்பவம்.

இது போன்று மாச்சரியங்கள் மிகுந்த பொழுது தான் நபிகளார் தோன்றி உண்மையான இறைக்கட்டளைகளை மீண்டும் இங்கே ஸ்தாபித்தார்கள்.

திருக்குரானும் பைபிளும் ஒன்றல்ல.. பைபிள் மனிதக் கரங்களால் மாசடைந்து விட்டது என்பதற்கு பைபிளும் சாட்சி சொல்கிறது. கிறிஸ்துவர்களும் சாட்சி சொல்கிறார்கள்.

திருக்குர்ஆன் உண்மையின் வெளிச்சம். பைபிள் பொய்களின், முரண்பாடுகளின் சங்கமம்.

திருக்குர்ஆன் தெளிவான இறை வேதம்.. இந்த வேதம் தான் நபிகளாருக்கு முந்தைய அத்தனை இறைத் தூதர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. அதனாலே முந்தைய வேதங்கள் எத்தனைத் தான் சிதிலமடைந்திருந்தாலும் திருக்குரானின் சாராம்சம் அத்தனை வேதங்களிலும் தென்படுகிறது..

ஒரே இறைவனை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.!

-பூமராங். 

Monday, 11 January 2016

Prophet Muhammad's Letter to all Christians






Below is the English rendering of a letter from the Prophet Muhammad (pbuh) to all Christians.

In a time when tensions between Islam and Christianity seem to be at an all time high, we remind our Christian friends that a true Muslim cannot hurt a Christian in any way, neither by his hand, nor by his tongue.

The below letter requires no explanation.

We hope it provides credence and comfort that Prophet Muhammad (sa) truly celebrated his Christian friends. (The original letter is now in the Topkapi Museum in Instanbul)
--------------------



“This is a message from Muhammad ibn Abdullah, as a covenant to those who adopt Christianity, near and far, we are with them.

Verily I, the servants, the helpers, and my followers defend them, because Christians are my citizens; and by Allah! I hold out against anything that displeases them.

No compulsion is to be on them.

Neither are their judges to be removed from their jobs nor their monks from their monasteries.

No one is to destroy a house of their religion, to damage it, or to carry anything from it to the Muslims’ houses. Should anyone take any of these, he would spoil God’s covenant and disobey His Prophet.

Verily, they are my allies and have my secure charter against all that they hate.

No one is to force them to travel or to oblige them to fight. The Muslims are to fight for them.

If a female Christian is married to a Muslim, it is not to take place without her approval. She is not to be prevented from visiting her church to pray.

Their churches are to be respected. They are neither to be prevented from repairing them nor the sacredness of their covenants. No one of the nation (Muslims) is to disobey the covenant till the Last Day (end of the world).”



English translation from ‘Muslim History: 570 – 1950 C.E.’ by Dr. A. Zahoor and Dr. Z. Haq, ZMD Corporation. P.O. Box 8231 – Gaithersburg, MD 20898-8231 – Copyright Akram Zahoor 2000. P. 167